No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

சான்று பகர்வதற்கான காலமே முதுமை 

முதுமை பற்றிய இன்றைய நம் புதன் பொது மறைக்கல்வியுரையில், யோவான் நற்செய்தியின் இறுதியில் பதிவுசெய்யப்பட்டுள்ள உயிர்த்த இயேசுவுக்கும், பேதுருவுக்கும் இடையே நடந்த உரையாடல் குறித்து சிந்திப்போம் (21:15-23). திபேரியக் கடல் அருகே இடம்பெற்ற உள்ளத்தை உருக்கும் இந்த உரையாடல், இயேசு தம் சீடர்களை எவ்வளவு தூரம் அன்புகூர்ந்திருந்தார் என்பதையும், அவர், தம் சீடர்களோடு, குறிப்பாக, பேதுருவோடு கொண்டிருந்த மிக உன்னத மனிதம் நிறைந்த உறவையும் பளிச்சென காட்டுகிறது. அந்த உரையாடலில் இயேசு, “யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?” என்று மூன்று முறை கேட்டார். அப்போது பேதுரு, கிறிஸ்துவிடம் தான் வைத்திருக்கும் அன்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறார். ஆண்டவரின் ஆடுகளைப் பேணிவளர்க்கும் கட்டளையையும் அவரிடமிருந்து பேதுரு பெறுகிறார். நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடிவந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய் என்று இயேசு கூறிய, பேதுரு முதுமையில் எதிர்கொள்ளவிருக்கும் மறைசாட்சிய வாழ்வு பற்றியும் சுட்டிக்காட்டுகிறார். இயேசுவின் இவ்வார்த்தைகள், வயது முதிர்ந்தோருக்கு ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தைக் கொண்டிருக்கின்றன.

ஏனெனில், வாழ்நாளில் ஆண்டுகள் கடந்து செல்கையில், அந்நிலை, இயல்பாகவே உடலளவில் தளர்ச்சியை ஏற்படுத்துகிறது மற்றும் அடுத்தவரைச் சார்ந்திருக்கவேண்டிய நிலைக்கும் உள்ளாக்குகின்றது. அதேநேரம், முதுமை, ஆண்டவர் மீதுள்ள அன்பு, அவரது வாக்குறுதிகள் மீதுள்ள நம்பிக்கை, மற்றும், ஆன்மீக ஞானத்தில் வளர்ச்சி ஆகியவற்றை புதுப்பிக்கும் காலமாகவும் இருக்கமுடியும். மேலும், அந்த உரையாடலின் இறுதியில், பேதுரு, யோவானைச் சுட்டிக்காட்டி, “ஆண்டவரே இவருக்கு என்ன ஆகும்?” என்று இயேசுவிடம், கேட்டார். அதற்கு இயேசு, பேதுருவிடம், “நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா” என்றார். இயேசு இவ்வாறு கூறியதன் வழியாக, திருத்தூதர்களில் இளையவராக இருந்த யோவான் குறித்து பேதுரு கவலைப்படவேண்டாம், மாறாக, பேதுரு, தன் சொந்த அழைப்புக்கும், பணிக்கும் விசுவாசமாக இருக்கவேண்டும் என்றும் சொல்கிறார். இயேசுவின் இச்சொற்கள், நம் வாழ்வின் இறுதி ஆண்டுகளில் இளைய தலைமுறைகளுக்கு இடம் ஒதுக்கவும், அனைவருக்கும் திறந்துவைக்கப்பட்டுள்ள ஆண்டவரின் மீட்பளிக்கும் திட்டத்தில் அவர்களுக்குரிய இடத்தை மதிக்கவும் வேண்டுமென்று நமக்கு நினைவுபடுத்துகின்றன. ஆதலால் கிறிஸ்துவின் சீடர்களுக்கு முதுமை என்பது, தியானம், நன்றியுணர்வு, நம் வாழ்விலும், நம்மைச் சுற்றியுள்ள உலகிலும் கடவுளின் அருள் தொடர்ந்து செயல்படுவதற்குச் சான்றுபகர்தல் ஆகியவற்றின் பலனுள்ள காலமாக இருக்க முடியும்.

Comment