No icon

பொது மறைக்கல்வியுரை

உரையாடல் மற்றும், அமைதியின் பஹ்ரைன் திருத்தூதுப் பயணம்

நவம்பர் 09 ஆம் தேதி, இத்தாலி நேரம் புதன் காலை ஒன்பது மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பொது மறைக்கல்வியுரை வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் நடைபெற்றது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 06 ஆம் தேதி ஞாயிறன்று முடித்துத் திரும்பிய பஹ்ரைன் வளைகுடா நாட்டுத் திருத்தூதுப் பயணம் குறித்த தன் பசுமையான நினைவுகளைத்  திருப்பயணிகளிடம் எடுத்தியம்பினார்.

மூன்று நாள்களுக்கு முன்னர் பஹ்ரைன் முடியாட்சி நாட்டில் எனது திருத்தூதுப் பயணத்தை முடித்து திரும்பினேன். இந்நேரத்தில் இத்திருத்தூதுப் பயணத்தில் இறைவேண்டலோடு உடன்பயணித்த அனைவருக்கும் நன்றிகூற விழைகின்றேன். எனக்கு இனிய வரவேற்பளித்த பஹ்ரைன் அரசர், அரசு அதிகாரிகள், தலத்திரு அவை அதிகாரிகள், அந்நாட்டு மக்கள், மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டிருந்தோர் போன்ற எல்லாருக்கும் எனது நன்றியை புதுப்பிக்க விரும்புகிறேன். கிறிஸ்தவ நாடுகள் பல இருக்க, இஸ்லாமியரைப் பெரும்பான்மையாகக்கொண்ட இச்சிறிய நாட்டிற்கு திருத்தந்தை ஏன் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டார் என்ற கேள்வி உங்களில் எழலாம். அதற்கு, உரையாடல், சந்திப்பு, பயணம் ஆகிய மூன்று சொல்லாடல்களால் பதில்கூற விரும்புகிறேன். அமைதிக்காகப் பணியாற்றும் பல்வேறு மதத் தலைவர்களை ஒன்றிணைத்த உரையாடலுக்கான பன்னாட்டு கூட்டம் பஹ்ரைனில் நடைபெற்றதையொட்டி இத்திருத்தூதுப் பயணமும் இடம்பெற்றது. உண்மையில், உரையாடல் என்பது அமைதியின் பிராணவாயுவாகும். இது, மனங்களையும் இதயங்களையும் சந்திப்புக்குத் திறக்கின்றது. இது, வன்முறை மற்றும், பிரிவினையின் சுவர்களை உடைத்தெறிகின்றது. போர் மற்றும், கலவரங்களால் சிதைந்துபோயுள்ள நம் உலகில், சமய மற்றும், பொதுநலத் தலைவர்களும், நன்மனம்கொண்ட அனைவரும், குறுகிய சுயநல ஆதாயங்களைக் கடந்து தங்கள் பார்வையைச் செலுத்தவும், மனிதக் குடும்பம் அனைத்திற்கும் ஒன்றிப்பு மற்றும், அமைதியைத் தேடவுமான சவாலை எதிர்கொள்கின்றனர். முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பஹ்ரைனில் தான் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம், கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே உரையாடல், சந்திப்பு மற்றும் உடன்பிறந்த உணர்வுள்ள ஒத்துழைப்புக்கு நம்பிக்கையளிக்கும் பயணத்தில், கூடுதலாக ஓர் அடி எடுத்துவைப்பதாக இருந்தது. பஹ்ரைனில் நான் பயணம் மேற்கொண்ட நாள்களில், கிறிஸ்தவத் தலைவர்களோடு இணைந்து அமைதிக்காக இறைவேண்டல் செய்யவும், பஹ்ரைன் மற்றும் ஏனைய வளைகுடாப் பகுதிகளிலிருந்து வந்திருந்த கத்தோலிக்கச் சமுதாயத்திற்குத் திருப்பலி நிறைவேற்றவும் முடிந்தது. ஒருவர் ஒருவரோடு அதிகமாகத் தொடர்புகொள்வதன் வழியாக, நம் உறவு எல்லைகளை விரிவுபடுத்துவோம் என இக்கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டேன். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ முப்பதாயிரம் கத்தோலிக்கர் இத்திருப்பலியில் பங்குபெற்றனர். இக்கத்தோலிக்கர் தங்களின் கிறிஸ்தவ நம்பிக்கையை மகிழ்ச்சியோடு சான்றுபகர்வதில் உறுதிப்படுத்தப்பட அரேபியா அன்னை மரியா அவர்களுக்கு உதவுவாராக. அனைத்து மத நம்பிக்கையாளர்களும் அமைதி, புரிந்துணர்வு மற்றும் உடன்பிறந்த உறவுகொண்ட நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான பாதையில் உறுதியாய் நிலைத்திருக்க அவ்வன்னை உதவுவாராக. உடன்பிறந்த உணர்வு மற்றும் அமைதியின் பயணத்தில் முன்னேறிச் செல்லவேண்டிய தேவை அனைவருக்கும் தேவைப்படுகின்றது. இப்பயணத்தில் நம் அன்னை மரியா நமக்கு உதவுவாராக.

இவ்வாறு  புதன் பொது மறைக்கல்வியுரையை நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கனரக போர் ஆயுதங்களால் தாக்கப்படுவதால் கடுந்துன்பங்களை எதிர்கொள்ளும் உக்ரைன் மக்களுக்கு அமைதி கிடைக்குமாறு இறைவனை மன்றாடுவோம் எனக் கேட்டுக்கொண்டு தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Comment