புனித ஜோசப் கஃபாசோ இத்தாலியில் 1811 ஆம் ஆண்டு, ஜனவரி 15 ஆம் நாள் பிறந்தார். பிறவிலேயே முதுகுத்தண்டு பிரச்சனையோடு பிறந்தார். அன்னை மரியாவிடம் மிகுந்த அன்பும், பக்தியும் கொண்டிருந்தார். ஒறுத்தல் முயற்சிகள் வழியாக இறையாசீர் பெற்றார். தவறாமல் திருப்பலியில் பங்கேற்று பலிபீடத்தில் உதவினார். ஏழை குழந்தைகளுக்கு மறைக்கல்வி கற்றுக்கொடுத்தார். ஒழுக்கமுள்ளவராகவும், தூயவராகவும் வாழ்ந்த ஜோசப் 22 ஆம் வயதில் குருவானார். தூரின் நகரில் குருமடத்தில் அறநெறி ஆசிரியராகவும், அதிபராகவும் பணி செய்தார். நற்கருணை பக்திக்கு முதலிடம் கொடுத்தார். ஒப்புரவு அருட்சாதனம் வழி இறை மன்னிப்பை மக்களுக்கு அனுபவமாக்கினார். ஆன்ம ஆலோசகராகவும், சமூக நலனில் அக்கறை உள்ளவராகவும், ஏழைகள் ஆதரவற்றோருக்கு ஆதரவும் அளித்தார். தானம், தவம், ஒறுத்தல் வழி இறைவனை மாட்சிப்படுத்தி 1860 ஆம் ஆண்டு, ஜூன் 23 ஆம் நாள் இறந்தார்.