No icon

குடந்தை ஞானி

கிறிஸ்தவர்கள் எனக்கு மாண்பை அளித்தனர்--சமந்தர் சிங்

25 ஆண்டுகளுக்கு முன், அருளாளர் ராணி மரியா அவர்களைக் கத்தியால் குத்திக் கொலைசெய்த, முன்னாள் இந்துமத தீவிரவாதியான சமந்தர் சிங் அவர்கள், கிறிஸ்தவர்கள் தனக்கு மாண்பை அளித்தனர் என்று ஆசியச் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டில் அருளாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட, அருள்சகோதரி ராணி மரியா அவர்களின் நினைவு நாளன்று, சமந்தர் சிங் அவர்கள், உதய் நகருக்குச் சென்று கல்லறையைத் தரிசித்து, அச்சகோதரிடம் செபித்தார்.

அச்சமயத்தில் ஆசியச் செய்தி நிறுவனத்திடம் உரையாடிய சமந்தர் சிங் அவர்கள், நான் இந்து மதத்தைச் சார்ந்தவன், மதமாற்றம் என்று குற்றம் சுமத்தி கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவது தவறு என, அவர்களைத் துன்புறுத்துவோரிடம் என்னால் கூற முடியும் என்றும், இவ்விவகாரத்தில் கிறிஸ்தவர்கள் அநியாயமாகக் குற்றம் சாட்டப்படுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

மதமாற்றம் என்று அநீதியாக குற்றம் சாட்டப்படும் கிறிஸ்தவர்களுக்காக, அருள்சகோதரி ராணி மரியாவிடம் செபித்தேன் என்றும், மக்கள் தங்களது மாண்பைப் பெறவும், அவர்கள் மதிப்புள்ள ஒரு வாழ்வை வாழவும் கிறிஸ்தவர்கள் உதவுகின்றனர் என்றும், கிறிஸ்தவர்கள் நம் மக்களுக்குப் பணியாற்றுகின்றனர் என்றும், அவர்களைத் துன்புறுத்துவோருக்குத் தவறான தகவல்கள் தரப்படுகின்றன. மற்றும், அவர்கள் அதில் ஈடுபடத் தூண்டப்படுகின்றனர் என்றும் சமந்தர் சிங் அவர்கள் கூறியுள்ளார்.

சமந்தர் சிங் அவர்கள், 1995 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி, அருளாளரான அருள்சகோதரி ராணி மரியா அவர்களை, பேருந்திலிருந்து கீழே தள்ளிவிட்டு, சாலையில் தரதரவென இழுத்துச்சென்று, 54 தடவை கத்தியால் குத்தி கொலை செய்தார். அக்கொலைக் குற்றத்திற்காக, 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார். ராணி மரியா அவர்களின் இளைய சகோதரியான அருள்சகோதரி செல்மி பவுல் அவர்கள்அவரை பலமுறை சிறையில் சந்தித்து மன்னிப்பு வழங்கினார். மற்றும் அவரது மனமாற்றப் பயணத்திலும் உடன் பயணித்தார். அதனால், சமந்தர் சிங் அவர்கள், 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

Comment