No icon

மன அழுக்கெனும்மாசு அகற்றிடு

மன அழுக்கெனும்மாசு அகற்றிடு

பேரா.பிலிப் & பேரா. இம்மாகுலேட்

கண்ணில் தூசி விழுந்துவிட்டால் எப்படி பதற்றம் அடைகிறோம். எந்த வகையிலாவது ஊதியோ, தண்ணீரில் கழுவியோ, வேறு எந்த வகையிலாவது, அது கண்ணில் இருந்து உறுத்திக் கொண்டேயிருக்கும். கண்ணீர் வடியும், வலிக்கும். அதைவிட மிக முக்கியமான பாதிப்பை மன அழுக்கெனும் மாசு ஆன்மாவில் படியும்போது ஏற்படுத்துகிறது. அநேகருக்கு ஆன்மா என்ற ஒன்று இருப்பதுவோ, அதனால் ஏற்படும் பாதிப்பு மிக அதிகமானது என்பதுவோ பலருக்குத் தெரியவே தெரியாது.

உறக்கமின்மை, மனச்சோர்வு போன்ற பாதிப்புகள் புரிகிறது. அது தங்களிடம் இருக்கிறது என்ற உணர்வு நிலை இருக்கிறது. ஆனால், மன அழுக்கு எனும் மாசுபடிந்திருப்பது தெரியவே தெரியாது. சிறு வயதில் அல்லது வளர் இளம் பருவத்தில் அப்போது மனதிலே இருந்த உறுத்தல்கள், அழுத்தங்கள் காலப்போக்கில் பழகிவிட்ட நிலையில் அதைக்குறித்து ஒன்றுமே தெரியாத நிலைக்குப் பலர் வந்து விடுகின்றனர். தற்கொலை எண்ணம், வலிப்பு நோய், மனநோய் போன்ற பெரிய தீமைகளுக்குக் காரணம் குற்ற உணர்வு எனும் மனஅழுக்கு படிந்த சூழ்நிலையில், அது பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது என்பது அவர்களுக்கே தெரியாது.

நிகழ்ச்சி: 1

இளையோருக்காக ஏற்பாடு செய்த தியானம் அது. இளம்பெண்களை ஒன்றிணைத்து, அமரச் செய்து உரையாற்றி, மாற்றம் கொண்டு வர வேண்டும் எனும் வைராக்கிய உணர்வோடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனால் பொறுப்பாய் இருந்த நிர்வாகி தனது முழு ஆற்றலையும் பயன்படுத்தி இளம்பெண்களைப் பங்கேற்க தூண்டிக் கொண்டிருந்தார். இளம்பெண்களுக்கு ஒப்புரவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் தப்பித்துக்கொள்ள வெவ்வேறு பதுக்கிடங்களைத் தேடி ஒளிந்து

கொண்டிருந்தனர். எப்படியாவது அவர்களது ஆன்மாவில் உள்ள மாசு, குற்றம் எனும் மன அழுக்கை அகற்ற உதவும் சிறந்த கருவியான ஒப்புரவு அருட்சாதனம் ஏற்பாடாயிருந்தது. ஆனால், அதில் பங்கேற்க விரும்பாத ஓர் இளம் பெண், ஏன் தயக்கம்? என்று கேட்டபோது, அருள்பணியாளர்களிடம்  சொல்லவில்லை, ஆனால் உங்கிட்டே சொல்றேன் என்று தன் வாழ்வின் நிகழ்ந்த பெரிய பாதிப்புகளைச் சொன்னாள். சந்தர்ப்ப வசத்தால் ஒரே ஒரு நாள் ஒரு நபருடன் வைத்த தவறான சேர்க்கையினால் கருத்தரித்திருக்கிறாள். ஆனால், அவளுக்கு நான்கு மாதங்கள் வரை தெரியாது. இவ்வளவு அறிவற்ற நிலையில் அவள் கர்ப்பமாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதனால் வீட்டில் ஏமாற்றி துணிச்சலோடு சென்று கருச்சிதைவு (Abortion) செய்து வந்திருக்கிறாள். ஆனால், அதன்பிறகிலிருந்து வலிப்பு நோய் வருகிறது. அது வருவதற்கு முன்னர், அம்மா என்னைக் கொன்றுவிட்டாயே என்ற குரல் கேட்டது போலிருக்கும். மனஅழுத்தம் காரணமாக, வலிப்பு நோய், படிக்க முடியாத நிலை, மன பயம் போன்ற பாதிப்புகள் ஆன்மாவில் விழுந்த தூசிபோல உறுத்திக்கொண்டேயிருந்திருக்கிறது. அதன் பாதிப்புகளை விளக்கிச் சொல்லி, ஒரு வழியாக ஒப்புரவு அடையாளம் பெறச் செய்தபோது, முகத்திலே மலர்ச்சி, மீண்டும் உடலில் துள்ளல், புன்னகையோடு “கடவுள் மன்னித்துவிட்டார், இனிமேல் நினைவுகூர மாட்டார்தானே? என்று கேட்டாள். ஆமாம், ஏராளமான திருவிவிலிய வாக்குறுதிகள் உண்டு. எடுத்துக்காட்டாக

(i). குற்றங்களைத் துடைத்தழிக்கின்றேன்; உன் பாவங்களை நினைவிற் கொள்ளமாட்டேன் (எசா 43:25).

(i i). தீச்செயலை நான் மன்னித்து விடுவேன்; பாவங்களை இனிமேல் நினைவு கூர மாட்டேன் (எரே 31:34).

(i i i). தீச்செயலை நான் இரக்கத்தோடு மன்னித்து விடுவேன் (எபி 8:12).

(iv). குற்றத்தை மன்னித்தீர்; பாவங்கள் அனைத்தையும் மறைத்துவிட்டீர் (திபா 85:2).

(v). மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவி லுள்ளதோ; அத்துனைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகிறார் (திபா 103:12).

(vi). பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்து விடுவார் (மீக் 7:19).

(vii). என் பாவங்கள் அனைத்தையும் உம்முதுகுக்குப் பின்னால் எறிந்துவிட்டீர் (எசா 38:17).

(viii). கடுஞ்சிவப்பாய் இருக்கும் பாவங்கள், உறைந்த பனிபோல வெண்மையாகும்; இரத்த நிறமாய் சிவந்திருந்தவை பஞ்சைப்போல வெண்மையாகும் (எசா 1:18).

(iஒ). உன் குற்றங்களை கார்மேகம் போலும், உன் பாவங்களை பனிப்படலம் போலும் அகற்றி விட்டேன் (எசா 44:22). (காண்க. "ஒப்புரவும் புதுவாழ்வும்" என்ற புத்தகத்தில் பக்கம் 10,11)

இந்த வசனங்களைச் சொல்லி இயேசு மன்னிக்கும் போது மறந்துவிடுகிறார், நினைவு கூர மாட்டார். ஆன்மாவின் மாசுமுழுவதும் அகற்றப்பட்டுவிட்டது என்று உறுதி கொடுக்கப்பட்டது.

அதன்பிறகு ஆறுவருடம் கழித்து, ‘எனக்கு வலிப்பு வரவில்லை’. நான் திருமணம் செய்யலாமா? என்று ஏக்கத்தோடு கேட்டாள். கடவுளின் மன்னிப்பு முழுமையானது, மாசு அகற்றப்பட்டபின் அதன் அடையாளம் எதுவுமே இருக்காது என்று உறுதி செய்யப்பட்டது. இன்னும் ஆறுவருடம் கழித்து, தனக்கு கருச்சிதைவு ஆகியிருந்தது என்ற உண்மையைச் சொல்லிய பிறகும், ஏற்றுக்கொண்டு திருமணம் செய்து கொண்ட கணவனோடும் இரண்டு குழந்தைகளோடும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறாள்.

ஆன்ம தூசி அகற்றும் உன்னத கருவி ஒப்புரவு அருட்சாதனம். இந்த “ஒப்புரவும் புதுவாழ்வும்” புத்தகம் 65,000 பிரதிகள் அச்சிட்டு கொடுத்திருக்கிறோம். ஒரு இலட்சியமாவது கொடுக்க வேண்டும் என்ற ஏக்கம் உண்டு. ஒன்றின் விலை ஐந்து ரூபாய் மட்டுமே. மனத்தின் மாசு அகற்றுவதில் ஒப்புரவு அருளடையாளத்திற்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

பெண்களைப் பாதிப்பதில் கருச்சிதைவு அதிகம் பாதிப்பு ஏற்படுத்துவது போல, ஆண்களிலே இளையோரை அதிகம் பாதிப்பது சுயஇன்பம் (Mastur bation) தேடும் பழக்கம். அது ஒரு இளையோருக்கான தியானம். ஒரு வாலிபன் தனக்கு இந்தக் கைப்பழக்கம் அதிகமாவதனால் கை நடுக்கம் வந்துவிட்டது என்று சொன்னான். இந்த தீமையினால் ஏற்படும் பாதிப்பு மிக அதிகம். ஏதோ விளையாட்டு என்று ஆரம்பிக்கும் இன்பம் தேடும் பழக்கம் அதிகமாகி, கை நடுக்கம், ஆண்மைக்குறைவு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகின்றன.

நிகழ்ச்சி: 2

பெற்றோருக்கு இரண்டு ஆண்குழந்தைகள். மூத்தமகன் பணிகாரணமாக வெளியூருக்குப் போய்விட்ட நிலையில், தனது ஒரே துணை வீடியோ தான். அதில் பார்க்கக்கூடாததைப் பார்த்து தீய பழக்கங்களுக்கு அடிமைப்பட்டு கை நடுக்கம், ஆண்மைக் குறைவு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. அப்போது நல்ல தியானம் செய்து பாவங்களுக்கு மன்னிப்பு பெற்ற பிறகு, தனக்கென்று சில இறைவார்த்தைகளை மாத்திரைகளாகப் பெற்றுச் சென்றான்.

(i). திருப்பாடல் 33: 13-15 ஆண்டவர் வானின்று பார்க்கிறார் என்ற உணர்வும், (ii). கலாத்தியர்  5:24, 25 இல் உள்ளதுபோல தனது இழிவுணர்ச்சியை சிலுவையில் அறைந்து விடவேண்டும்; பிறகு ஆலோசனைகள் அவனுக்கு உதவி செய்தது. இரண்டு வருடத்திற்குள் ஆண்மை குறைவு சரியாகி ஒரு அனாதை பெண்ணுக்கு வாழ்வு கொடுத்தான். இப்போது கல்லூரியில் பயிலும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

மனத்தின் மாசு அகற்றுவது முக்கியம் என்பது மேற்சொன்ன இரண்டு நிகழ்வுகளிலிருந்தும் தெளிவாகிறது. தோமினிக் சாவியோ போலும், மரிய கொரற்றி போலும் நம் பிள்ளைகள் இருந்தால் மிகவும் நல்லது. ஆனால், இன்றைய மீடியா தாக்கம் ஏற்படுத்தும் பாதிப்புகள் சொல்லி முடியாது. அப்படி பாதிப்புகளினால் நம் குழந்தைகள் ஆன்மாவில் மாசுபடிந்தவர்களாய் இருந்தால் பெரியவர்களிடம் பகிர மனமில்லாவிட்டாலும், இதுபோன்று ஆற்றுப்படுத்துதலுக்குப் பிறகு, ஒப்புரவு அருள்அடையாளம் பெற்று விடுதலைபெற முடியும் என்ற நம்பிக்கை உண்டு. இறைநம்பிக்கையும், தன்னம்பிக்கையும் இருந்தால் எத்தனை பெரிய பிரச்சனை என்றாலும் பறந்து, தப்பித்துவிடலாம். எனவே, இளைஞனே! மனஅழுக்கெனும் மாசு அகற்றிடு. வாழ்விலே வசந்தம் வீச, புது சமுதாயம் படைக்க இன்றே புறப்பட்டு விடு.

-இன்னும் கதிர் வீசும்-

Comment