No icon

World Youth Day 2023

2023ம் ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் உலக இளையோர் நாள் நிகழ்வுகள்

போர்த்துக்கல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 முதல் 6ம் தேதி முடிய உலக இளையோர் நாள் நிகழ்வுகள் நடைபெறும் என்று லிஸ்பன் பெருமறைமாவட்டத்தின் பேராயரும், போர்த்துக்கல் முதுபெரும் தந்தையுமான கர்தினால் மானுவேல் கிளமெண்ட்டே அவர்கள், அக்டோபர் 4 திங்களன்று அறிவித்தார்.

பெருந்தொற்று உருவாக்கியுள்ள நெருக்கடியால் பன்னாட்டு பயணங்கள் இன்னும் தடுமாற்றம் கண்டுள்ள வேளையில், இந்த அறிவிப்பை முன்கூட்டியே வெளியிடுவதால், இந்த இளையோர் நாள் நிகழ்வுகளில் பங்கேற்க  விழையும் இளையோருக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகிறது என்று கர்தினால் கிளமெண்ட்டே அவர்கள், செய்தியாளர்களிடம் கூறினார்.

2020ம் ஆண்டு அக்டோபர் மாதம், உரோம் நகரில் நடைபெற்ற ஒரு திருப்பலியில், உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் முக்கிய அடையாளங்களான திருச்சிலுவையும், அன்னை மரியாவின் திரு உருவப்படமும் புனித பேதுரு பெருங்கோவிலில், திருத்தந்தையின் முன்னிலையில், பானமா இளையோரிடமிருந்து, போர்த்துக்கல் இளையோரின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2021ம் ஆண்டு சனவரி மாதம், இந்த இளையோர் நாள் நிகழ்வுகளின் அதிகாரப்பூர்வ பாடல் வெளியிடப்பட்டது.

1985ம் ஆண்டு திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களால் உருவாக்கப்பட்ட உலக இளையோர் நாள் கொண்டாட்டங்கள், முதல் முறையாக 1986ம் ஆண்டு உரோம் நகரில் நடைபெற்றது. இதற்குப்பின், 1987ம் ஆண்டு புய்னோஸ் ஏர்ரஸ் (அர்ஜென்டினா), 1989ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின்  சந்தியாகோ டி கம்போஸ்டெல்லா, 1991ம் ஆண்டு செஸ்டோச்சோவா,  1993ம் ஆண்டு கனடாவின் டென்வர், 1995ம் ஆண்டு பிலிப்பைன்சின் மணிலா, 1997ம் ஆண்டு  பாரிஸ், 2000ம் சிறப்பு யூபிலி ஆண்டில் மீண்டும் உரோம், 2002ம் ஆண்டு டொரோன்டோ, 2005ம் ஆண்டு ஜெர்மனியின் கொலோன், 2008ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி, 2011ம் ஆண்டு ஸ்பெயினின் மாட்ரிட், 2013ம் ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ, 2016ம் ஆண்டு போலந்தின் கிராக்கோவ்  ஆகிய நகரங்களில் நடைபெற்ற இளையோர் உலக நாள் நிகழ்வுகள், 2019ம் ஆண்டு பனாமாவிலும் நடைபெற்றது.

பானமா உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் இறுதி நாளன்று, பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் கெவின் பெரில் அவர்கள், அடுத்த உலக இளையோர் நாள் நிகழ்வுகள், 2022ம் ஆண்டு, போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் நடைபெறும் என்று அறிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கிய நெருக்கடிகளின் காரணமாக, 2022ம் ஆண்டு நடைபெறுவதாக இருந்த உலக இளையோர் நாள் நிகழ்வுகள், தற்போது, 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் 6ம் தேதி முடிய நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Comment