No icon

திருத்தந்தை  பிரான்சிஸ்

மறைமாவட்டங்களில் கிறிஸ்து அரசர் விழாவன்று இளையோர் நாள் கொண்டாட்டங்கள்

ஒவ்வோர் ஆண்டும், மறைமாவட்டங்களில் சிறப்பிக்கப்படும் இளையோர் நாள் கொண்டாட்டங்கள் குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை, நவம்பர் 22 ஆம் தேதி அன்று  சிறப்பிக்கப்பட்ட கிறிஸ்து அரசர் விழா திருப்பலியின் இறுதியில் திருத்தந்தை  பிரான்சிஸ் கொடுத்திருக்கிறார்.

இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக இளையோர் நாள் கொண்டாட்டங்கள் ஏதாவது ஒரு நகரில் திருத்தந்தையின் பங்கேற்புடன் நடைபெற்றுவரும் நிலையில், அதற்கு இடைப்பட்ட ஆண்டுகளில், மறைமாவட்ட அளவில், இதுவரை, குருத்தோலை ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்டுவந்த இளையோர் நாள் கொண்டாட்டங்கள், வரும் ஆண்டிலிருந்து, கிறிஸ்து அரசர் விழாவன்று சிறப்பிக்கப்படும் என திருத்தந்தை பிரான்சிஸ் அறிவித்தார்.

2019 ஆம் ஆண்டு பானமா நாட்டில் உலக இளையோர் நாள் நிகழ்ந்ததையொட்டி அங்கு கொண்டுசெல்லப்பட்ட உலக இளையோர் நாள் சிலுவையை, பானாமா இளையோர், போர்த்துக்கல் இளையோரிடம் ஒப்படைத்த சடங்கிற்கு முன் இவ்வறிவிப்பை விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்து வாழ்ந்து ஆட்சிபுரிகிறார் என்பதை உங்கள் வாழ்வு நடவடிக்கைகள் வழியாக உரக்க கூக்குரலிட்டு அறிவியுங்கள் என, இளையோருக்கு விண்ணப்பம் ஒன்றையும் விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

2022 ஆம் ஆண்டு போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் இடம்பெறுவதாக இருந்த உலக இளையோர் நாள் கொண்டாட்டங்கள், கோவிட்-19 கொள்ளைநோய் காரணமாக, 2023ம் ஆண்டிற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

2021 மற்றும், 2022ம் ஆண்டுகளில், மறைமாவட்ட அளவில் நடைபெறும் இளையோர் நாள் கொண்டாட்டங்கள், அவ்வாண்டுகளின் கிறிஸ்து அரசர் விழாவன்று சிறப்பிக்கப்படும். தமிழகத்தில் உள்ள மறைமாவட்டங்களும் அதன் ஆயர்களும் அதன் இளைஞர் பணிக்குழுவும் தமிழக இளைஞர் பணிக்குழுவும் இதற்கு உரிய முறையில் திட்டமிடவேண்டும்.

Comment