No icon

திருத்தந்தை பிரான்சிஸ் மூவேளை செப உரை

விசுவாசத்தை சுய தேவைகளுக்காக வளைப்பது குறித்து கவனம்

தங்களுக்கு மிகுதியாக இருப்பதை இறைவனுக்கு காணிக்கையாக வழங்கி, பக்திமானாக நடிக்கும் மறைநூல் அறிஞர்கள் குறித்தும், தன்னிடம் இருப்பது அனைத்தையும் பிறருக்கு தெரியாமல் காணிக்கைப் பெட்டியில் போட்ட விதவைப்பெண் குறித்தும் இயேசு பேசுவதை விவரிக்கும் நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து, தன் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையை திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கினார்.

நவம்பர் 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த விசுவாசிகளுக்கு நண்பகல் மூவேளை செபவுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எருசலேம் கோவிலுக்குள் அமர்ந்திருந்த இயேசு, தொங்கல் ஆடை அணிந்து, மக்கள் தங்களுக்கு வணக்கம் சொல்வதை எதிர்பார்க்கும் மறைநூல் அறிஞர்கள், தொழுகைக்கூடங்களிலும், விருந்துகளிலும் முதன்மையான இடத்தை பெற விரும்புவதையும், கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்வதையும், நீண்டநேரம் இறைவனிடம் வேண்டுவதுபோல் நடிப்பதையும் பற்றிக் குறிப்பிட்டு, அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களிடம் கேட்பதை காண்கிறோம் என்றார்.

அதேவேளை, காணிக்கைப் பெட்டியில் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்ட கைம்பெண்ணே, அனைவரைவிடவும் மிகுதியாகப் போட்டார், ஏனெனில், இவர் தனக்கு இருந்தது அனைத்தையும் போட்டுவிட்டார் என இயேசு எடுத்துரைத்து அப்பெண்ணைப் புகழ்வதையும் எடுத்துரைத்த திருத்தந்தை, இன்றைய நற்செய்தியில், கோவிலில் காணிக்கைப் பெட்டியருகே அமர்ந்து இயேசு 'உற்று நோக்கிக் கொண்டிருந்தார்' என்ற வாக்கியத்தை மையமாக வைத்து தன் மூவேளை செபவுரையை வழங்கினார்.

உற்று நோக்குதல், என்ற வாக்கியத்தை இந்நாள் நற்செய்தி வாசகத்திலிருந்து எடுத்த திருத்தந்தை  பிரான்சிஸ் அவர்கள், மறைநூல் அறிஞர்களைப்போல் வெளிவேடக்காரர்களாக தங்கள் விசுவாசத்தை வாழ்பவர்களைக் கூர்ந்து கவனித்து கவனமுடன்  செயல்படுமாறு அழைப்புவிடுத்தார்.

அனைத்திற்கும் மேலாக, வெளிப்புறத் தோற்றத்திற்கும், தன்னைப் பற்றிய அதிக அக்கறைக்கும் முக்கியத்துவம் கொடுக்க முயலும் வெளிவேடக்காரர்கள்போல் இல்லாமல் இருப்பதில் கவனமாக இருப்போம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் விசுவாசத்தை நம் சுய தேவைகளுக்காக வளைப்பது குறித்து அதிக கவனமுடன் செயல்படுவோம் என கூறியதுடன், அக்கால மறைநூல் அறிஞர்கள் மதத்தையும் தங்கள் அதிகாரத்தையும் தவறாக பயன்படுத்தி ஏழைகளை சுரண்டியதையும் சுட்டிக்காட்டினார்.

மற்றவர்களை நசுக்கவும், ஏழைகளின் பணத்தைப் பறிக்கவும் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தும் எவருக்கும் இயேசுவின் இந்நாள் போதனை ஒரு சிறந்த பாடம் மற்றும் எச்சரிக்கை என உரைத்த திருத்தந்தை, நாம் பிறரால் புகழப்பட வேண்டும் என செயல்களை ஆற்றுகிறோமா, அல்லது, கடவுளுக்கும் நமக்கு அடுத்திருப்போருக்கும், குறிப்பாக ஏழைகளுக்கும் ஆற்றும் பணியாக நம் செயல்கள் இருக்கின்றனவா என நமக்குளேயே கேட்டுப் பார்ப்போம், என அழைப்புவிடுத்தார்.

ஆன்மாவின் ஆபத்தான நோயாக இருக்கும் வெளிவேடத்தை குணப்படுத்த, இன்றைய நற்செய்தியில் ஏழைக் கைம்பெண்ணை நமக்கு முன்மாதிரியாக இயேசு காட்டுகிறார் எனவும் உரைத்த திருத்தந்தை, தன்னிடம் இருந்த அனைத்தையும் காணிக்கைப் பெட்டியில் போட்டுவிட்டு, வாழ்வில் தனக்குத் தேவையான அனைத்தையும் இறைவனில் கண்டுகொள்ளும் இந்த கைம்பெண் நமக்கு நல்ல எடுத்துக்காட்டு என உரைத்தார்.

தனக்கிருந்த அனைத்தையும் வழங்கிவிட்டு, இறைவனின் பெரும்வளத்தில் முன்நிபந்தனையற்ற நம்பிக்கைக் கொண்டு, அதில் நிறைவைக் கண்ட இந்த கைம்பெண்போல், நாமும், கடவுளையும் நமக்கு அடுத்திருப்பவரையும் அன்புகூர்வது எவ்வாறு என கற்றுக்கொள்வோம் என விண்ணப்பித்து, தன் நண்பகல் மூவேளை செபவுரையை திருத்தந்தை பிரான்சிஸ் நிறைவுச் செய்தார்.

Comment