No icon

பாலவாக்கம் கடற்கரை

புனித அந்தோணியார் திருத்தலம், செங்கை மறைமாவட்டம்

செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் கிழக்கு கடற்கரை சாலையில், சென்னைக்கு மிக அருகே, வங்கக் கடற்கரையில் பிரமாண்டமாக  அமைந்துள்ள ஆலயமே பாலவாக்கம் கடற்கரை புனித அந்தோனியார் திருத்தலம்.

செங்கை மறைமாவட்டம் உருவாவதற்கு முன்பாக, சென்னை மயிலை உயர்மறைமாவட்டத்தின் அங்கமாகசென்னை மாநகரின் புற நகர்ப் பகுதியாக  கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, வெட்டுவான்கேணி, ஈஞ்சம்பாக்கம் போன்ற பகுதிகள் இருந்தனஇப்பகுதிகள் அனைத்தும் வெட்டுவான்கேணி புனித சுவக்கீன் அன்னாள் ஆலயப் பங்கோடு இணைந்து சிறப்பாக  செயல்பட்டுக் கொண்டிருந்தது.

வெட்டுவான்கேணி புனித சுவக்கீன் அன்னாள் ஆலய பங்குத்தந்தையாகஅருள்பணி. சி.வி. தாமஸ் அடிகளார் 1985 ஆம் ஆண்டுகளில் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருந்தார். வெட்டுவான்கேணியிலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள கொட்டிவாக்கம் பகுதியில் அமைந்துள்ள சுவாமிநாத நகரில், தற்போதுள்ள கன்னியர் இல்லம், புனித அந்தோணியார் மெட்ரிகுலேசன் பள்ளி அமைந்துள்ள இடத்தை திரு. சுவாமிநாதன் என்பவர் இறைப்பணிக்காக தாமே முன்வந்து  தானமாகக் கொடுத்து உதவினார்.

 

இந்த இடத்தில், இப்பகுதி மக்களின் ஆன்மீகத் தேவையை நிறைவேற்ற அருள்பணி.சி.வி. தாமஸ் அடிகளாரின் முயற்சியில் சேவா மிஷனரி அருட்சகோதரிகளைக் கொண்ட கன்னியர் இல்லம் அமைக்கப் பட்டது. அந்நாட்களில் இப்பகுதியில் உள்ள இறைமக்களுக்காக இந்த கன்னியர் இல்லத்தில் வெட்டுவான்கேணி பங்குத்தந்தையாலும்  சத்தியநிலையம் சேசு சபை அருள்பணியாளர்களாலும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, திருவழிபாடு  நடைபெற்று வந்ததுஇறைமக்கள் இப்பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக குடியேறத் தொடங்கினர்.

அருள்பணி. சி.வி தாமஸ் அடிகளாரைத் தொடர்ந்து, அருள்பணி. சாக்கோ அடிகளார், அவரைத் தொடர்ந்து அருள்பணி. ஜார்ஜ் பாலக்காட்டு குன்னேல் ஆகியேர் வெட்டுவான்கெணி பங்குத்தந்தையர்களாக சிறப்புற பணியாற்றினர்அருள்சகோதரிகளும் இல்லங்களைச் சந்தித்து, இறைமக்களை கிறிஸ்தவ வாழ்வில் வேரூன்ற ஊக்கப்படுத்தி வந்தனர். செபமும் திருவழிபாடும் இறைமக்களைப் பக்குவப்படுத்தியது.

அந்நாட்களில் சென்னை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும்  அலுவலர்களுக்கு பாலவாக்கம் பல்கலைநகர் என்னுமிடத்தில் குடியிருப்புகள் அளிக்கப்பட்டன. இங்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ சமயங்களைச் சார்ந்த பல குடுங்களும் ஒற்றுமையாக வசித்து வந்தனர். இப்பகுதியில் குடியிருந்த கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்கள் இணைந்து பல்கலை நகரில் ஒரு இடத்தை தெரிவுச் செய்து, 1997 ஆம் ஆண்டில் ஒரு குடிசை ஆலயத்தை அமைத்தனர். வெட்டுவான்கேணி பங்குத்தந்தை அருள்பணி. ஜார்ஜ் பாலக்காட்டு குன்னேல் அவர்கள் இதனை ஆசிர்வதித்து, இப்பகுதிவாழ் மக்களுக்கு திருப்பலி ஒப்புக்கொடுத்து  அவர்களை நல்வழிப்படுத்தினார். இறைமக்களின் எண்ணிக்கை பெருகிய காரணத்தினால்   1997 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் நாளன்று சுமார் நான்கு கிரவுண்ட் நிலத்தில் புனித அந்தோனியார் சிற்றாலயம்  கட்டிமுடிக்கப்பட்டு திருவழிபாட்டிற்காக திறந்துவைக்கப்பட்டது. இவ்வாலயமானது, பல்வேறு தரப்பு மக்களையும் ஈர்க்கின்ற இடமாக அமைந்து, இங்கு வார நாட்களிலும் வார இறுதிநாட்களிலும்  திருவழிபாடுகள் நடைபெற்று வந்தன. ஒவ்வொரு வாரமும் புனித அந்தோனியாருக்கென்று செவ்வாய்க்கிழமை சிறப்பு பக்தி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இறைமக்கள் மலர்களையும், ரொட்டித்துண்டுகளையும், மலர்மாலைகளையும் காணிக்கையாகக் கொண்டுவந்து  புனித அந்தோனியார் வழியாக பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு நன்றி செலுத்தினர். இந்நிலையில்  சில விஷமிகளால் இந்த குடிசை ஆலயம் தகர்க்கப்பட்டது. அங்கு இறைமக்களிடையே  மிகுந்த பதட்டத்தை உருவாக்கியதுஇந்தத் துயரமான நிகழ்வுப் பற்றி  அப்போதைய சென்னை -மயிலை பேராயர் மேதகு அருள்தாஸ் ஜேம்ஸ் அவர்கள் மிகவும் வருத்தப்பட்டார்அன்றைய சிறுபான்மை ஆணையத்தலைவர் பேராயர் எஸ்ரா சற்குணம் அவர்களும் அப்போதைய  தமிழக முதல்வர், மற்றும் மாவட்ட  ஆட்சித்தலைவரும் பாதுகாப்பான இடத்தில் ஆலயத்திற்கு இடம் ஒதுக்க முன்வந்தனர்இவ்வாறு ஆலயம் அமைப்பதற்கான தேடல் தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தது....

பாலவாக்கத்தில் கடற்கரை புனித அந்தோணியார் ஆலயம்:

அந்நாட்களில்! எண் 38, எம்.ஜி.ஆர் சாலை பாலவாக்கத்தில் திரு. சுகுமார் -திருமதி. ஜெயந்தி சுகுமார் தம்பதியினர் வசித்து வந்தனர். பிற சமயத்தை சார்ந்த இவர்கள் கிறிஸ்துவின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு, 1994 ஆம் ஆண்டு கிறிஸ்தவம் தழுவினர். இயேசுவின் மீது மிகுந்த விசுவாசம் கொண்ட திருமதி. ஜெயந்தி சுகுமார் அவர்கள், தமது கனவில் இந்த இடத்தை வானதூதர்கள் புடைசூழ நிற்பது போல கண்டதாகவும், தங்களது இந்த இடத்தில் இறைப்பிரசன்னம் மிளிர வேண்டும் என விரும்பி, தியான மையம் அமைக்க விருப்பம் கொண்டு அருள்பணியாளர்களை அணுகியதாகவும் சொல்லப்படுகிறது.

இவ்வேளையில் திருமதி. ஜெயந்தி சுகுமார் இறந்து போகவே, தமது மனைவியின் விருப்பப்படி இவ்விடத்தில் தியான மையம் அமைக்க வேண்டி திரு. சுகுமார் அவர்கள், பெசன்ட்நகர் பங்குத்தந்தை அருள்பணி. லாரன்ஸ் ராஜ் அடிகளாரிடம் கோரிக்கை வைத்தார். ஆகவே அருள்தந்தை அவர்கள் பேராயர் மேதகு அருள்தாஸ் ஜேம்ஸ் மற்றும் திரு. சுகுமார் அவர்களிடமும் இவ்விடத்தில் ஆலயம் அமைக்க அனுமதி பெற்று, இடத்திற்கான உரிய தொகை கொடுத்து பத்திரப்பதிவு செய்தார்.

புனிதரின் சாட்சியாக கிடைக்கப்பெற்ற இவ்விடத்தில் கி.பி 2000 ஆம் ஆண்டில் பேராயர் அருள்தாஸ் ஜேம்ஸ் அவர்கள் அடிக்கல் நாட்டி, ஆலயம் கட்டுகிற பொறுப்பை அருள்பணி. லாரன்ஸ் ராஜ் அடிகளாரிடம் ஒப்படைத்தார். ஆலய கட்டுமானப் பணிகள் சிறப்புற நடைபெற்று வந்தன. கீழ்க்கோவில் 2000 -ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பணிகள் நிறைவு பெற்றது. இங்கு தான் முதன்முதலாக திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தன. பல்கலைநகர் ஆலயத்தில் இருந்து எடுக்கப்பட்ட புனித அந்தோனியார் சுரூபம் இங்கு நிறுவப்பட்டது. ஆலய கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தன... மக்களின் நிதியுதவி மற்றும் நன்கொடைகளால் மேல்த்தள ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றன.

சின்ன நீலாங்கரை, கசூரா கார்டன், பாலவாக்கம், கொட்டிவாக்கம் முதலிய பகுதிகளை உள்ளடக்கிய பாலவாக்கம் பங்காக 2001-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு முதல் பங்குத்தந்தையாக அருள்பணி. . டு. ஆண்டனி செபாஸ்டின் அவர்கள் பணிப்பொறுப்பேற்றார். மேல்கோவில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்தது. பங்கின் வளர்ச்சியில்  கொட்டிவாக்கம் அருள்சகோதரிகளின் பங்களிப்பு சிறப்புக்குரியது. மக்களின் முழு ஒத்துழைப்புடன் ஆலய கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவு பெற்று 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 02 ஆம் தேதி, புதிய திருப்பலி பீடத்தில் புனித தீமோத்தேயு -வின் திருப்பண்டம் வைக்கப்பட்டு ஆலயம் புனிதப்படுத்தப்பட்டது.

2003 -ஆம் ஆண்டு சென்னை -மயிலை உயர் மறைமாவட்டத்திலிருந்துபிரிக்கப்பட்டு, புதிதாக செங்கற்பட்டு மறைமாவட்டம் உதயமானபோது பாலவாக்கம் அதன்கீழ் வந்தது.

2003 -ம் ஆண்டு அருள்பணி. லூயிஸ் ராயர் அவர்கள் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று சிறப்பாக வழிநடத்தினார்.

2004 -ம் ஆண்டில் அருள்பணி. சிரில் ராஜ் பொறுப்பேற்று 2005 -ம் ஆண்டு எம்.ஜி.ஆர் சாலையின் முகப்பில் ஆலய நுழைவுவாயில் அமைத்தார்.

100 அடி உயர நற்கருணை கோபுரம் அமைக்கப்பட்டு, 25.02.2006 அன்று மேதகு ஆயர் நீதிநாதன் அவர்களால் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டு புனிதப்படுத்தப்பட்டது. நல்லாயன் நிலையம், கணிணி மையம் அமைக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு ஆலய வளாகத்தில் சிலுவைப்பாதை நிலைகள் அமைக்கப்பட்டன. திருத்தல திருவிழாக்கள் கடற்கரையில் பிரமாண்டமாக நடத்தப்பட்டன.

2008-ம் ஆண்டு ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவுபடுத்தப்பட்ட ஆலயத்தின் இருமருங்கிலும் புனித அந்தோணியாரின் திருப்பண்ட காட்சி கோவில், மாதா காட்சி கோவில் ஆகியன அமைக்கப்பட்டன. பங்குத்தந்தை இல்லம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

விரிவுபடுத்தப்பட்ட ஆலயமானது செங்கற்பட்டு மறைமாவட்ட ஆயர் மேதகு நீதிநாதன் அவர்களால் 06.01.2009 அன்று ஆசீர்வதிக்கப்பட்டு, மறைமாவட்ட திருத்தலமாக அறிவிக்கப் பட்டது.

2009 ஆம் ஆண்டு முதல் அருள்பணி. இயேசு அந்தோணி அவர்கள் சிறப்பாக பணியாற்றினார். ஆலயத்தை சுற்றிலும் கற்கள் பதிக்கப்பட்டது. புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாடு நிகழ்வுகள் பதிக்கப்பட்ட கொடிமரம் நிறுவப்பட்டது. உலகிலுள்ள அனைத்து தேவ அன்னையின் சுரூபங்கள், விளக்கப்படங்கள் அடங்கிய அழகிய மாதா காட்சியகம் அமைத்து திருத்தலத்தை மெருகூட்டினார்.

2014-ம் ஆண்டு முதல் அருள்பணி. ஜான் சுரேஷ் அவர்கள் சிறப்புற பணியாற்றினார்.

2018-ம் ஆண்டு முதல் பொறுப்பேற்ற அருள்பணி. லியோ டோமினிக் அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து திருத்தல வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகின்றார்.

Comment