No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தையின் 37வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது 37வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை, ஜூலை 24, ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 8.10 மணிக்கு வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து தொடங்கினார். ஒரு வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை தொடங்குவதற்கு முன்பும், அதை முடித்துத் திரும்பும்போதும், திருத்தந்தை, உரோம் மேரி மேஜர் அன்னை மரியா பெருங்கோவில் சென்று அவ்வன்னையிடம் அப்பயணத்தை அர்ப்பணித்து செபிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார். “ஒன்றிணைந்து நடப்போம்என்ற தலைப்பில் நடைபெறும் 37வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமாகிய, கனடா நாட்டுக்குத் திருத்தூதுப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னரும் அந்த பழக்கத்தை திருத்தந்தை நிறுத்திவிடவில்லை.

சாந்தா மார்த்தா இல்லத்தில் தன்னை வழியனுப்ப வந்திருந்த சில வறியோர் மற்றும் பலருக்கு வாழ்த்துச் சொல்லி, உரோம் பிஃயூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திற்கு காரில் சென்று, திருத்தந்தை பிரான்சிஸ், ஞாயிறு காலை 9.16 மணிக்கு ITA A 330 இத்தாலிய விமானத்தில் கனடா நாட்டின் எட்மன்டன் பன்னாட்டு விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டார்.

திருத்தந்தை, ஏறத்தாழ பத்தரை மணி நேரம் விமானப் பயணத்தை மேற்கொண்டு கனடாவின் எட்மன்டன் நகரின் பன்னாட்டு விமான நிலையத்தை, உள்ளூர் நேரம் இஞ்ஞாயிறு பகல் 11.09 மணிக்குச் சென்றடைந்தார். அப்போது இந்திய இலங்கை நேரம் இஞ்ஞாயிறு இரவு 10 மணி 39 நிமிடங்களாக இருந்தன.

இந்நீண்ட பயணத்தில் தான் கடந்துசென்ற, இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், பிரித்தானியா, ஐஸ்லாந்து, கிரீன்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளின் அரசுத்தலைவர்களுக்கு இறைவேண்டல், ஆசிருடன்கூடிய நல்வாழ்த்துத் தந்திச் செய்திகளை திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பினார். இத்திருத்தூதுப் பயணம் குறித்த செய்திகளை சுடச்சுட வெளியிடுவதற்காக, தன்னோடு பயணம் செய்த ஏறத்தாழ எண்பது பன்னாட்டு செய்தியாளர்களையும் திருத்தந்தை வாழ்த்துவதற்குத் தவறவில்லை. திருத்தந்தையின் உடல்நலம் கருதி, அவரோடு ஒரு மருத்துவரும், செவிலியரும் சென்றனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதுப் பயண நிகழ்வுகளை முதலில் தொடங்கும் கனடாவின் எட்மன்டன் நகருக்கும், இந்தியா-இலங்கைக்கும் இடைப்பட்ட கால இடைவெளி 14 மணி நேரங்களாகும்.

தவத் திருப்பயணம்

திருத்தந்தையின் 37வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம், ஒரு தவத் திருப்பயணமாக அமைந்துள்ளது. வட அமெரிக்காவிலுள்ள கனடாவின் பூர்வீக இன மக்களுக்கு, கடந்த காலத்தில், குறிப்பாக கிறிஸ்தவ சபைகளால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு மன்னிப்புக் கேட்கவும், அவற்றால் அவர்கள் அடைந்த மனப்புண்களைக் குணப்படுத்தவும், அம்மக்களோடு தான் கொண்டிருக்கும் நெருக்கத்தை வெளிப்படுத்தவும், ஒரு தவப் பயணத்தை திருத்தந்தை கனடா நாட்டில் மேற்கொள்கிறார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது தலைமைப் பணியில் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டுள்ள 56வது நாடாக கனடாவுக்கு அவர் சென்றுள்ளார்.

1984, 1987, 2002 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை கனடாவுக்குத் திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்ட திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, இந்த 37வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தைத் தொடங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எட்மன்டன் நகரை உள்ளூர் நேரம் பகல் 11 மணி 20 நிமிடங்களுக்குச் சென்றடைந்தார்.

எட்மன்டன் பன்னாட்டு விமான நிலையத்தில் கனடாவின் ஆளுனர், பிரதமர் உட்பட முக்கிய அரசு மற்றும், திருஅவைத் தலைவர்கள் திருத்தந்தையை வரவேற்றனர்பின்னர் அங்கிருந்து 31.3 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அந்நகரின் புனித யோசேப்பு அருள்பணித்துவ பயிற்சிக் கல்லூரி சென்று இரவு உணவருந்தி திருத்தந்தை பிரான்சிஸ் ஓய்வெடுத்தார். இந்த 37வது வெளிநாட்டுப் பயண நிகழ்வுகள் ஜூலை 25 திங்களன்று தொடங்கியது.

 இந்நாளில் மஸ்காவாசிஸ் நகருக்குக் காரில் சென்று, ஃபர்ஸ் நேஷன்ஸ், மெட்டிஸ், இன்னுயிட் (First Nations, Me'tis, Inuit )) ஆகிய பூர்வீக இன மக்களைச் சந்தித்தார். 1884, 1885ம் ஆண்டுகளில் இப்பகுதியில் கத்தோலிக்க மறைப்பணித்தளத்தை மீண்டும் உருவாக்க முயற்சித்தபோது, அருள்பணி கான்ஸ்டான்டைன் ஸ்கோலன் (Constantine Scollen)அவர்கள், இந்நகரை "கரடியின் குன்றுகள்" என்றே எப்போதும் அழைத்தார் என்று சொல்லப்படுகிறது.

மேலும், ஜூலை 24, ஞாயிறு தாத்தாக்கள் பாட்டிகள், மற்றும் முதியோர் இரண்டாவது உலக நாளாகையால், அன்று கனடாவின் க்யூபெக் (Quebec) நகரிலுள்ள புனித அன்னா திருத்தலம் சென்று திருத்தந்தை செபித்தார். அத்திருத்தலத்தில் அமெரிக்க பூர்வீக இனத்தைச் சார்ந்த புனித கட்டேரி தெக்காக்வித்தா (Kateri Tekakwitha) திருவுருவத்தை அர்ச்சிப்பார். இவரே முதல் அமெரிக்க பூர்வீக இனப் புனிதராவார். இத்திருத்தூதுப் பயணத்தில், கனடாவின் எட்மோன்ட்டன், க்யூபெக், ஈக்குவாலுயிட் (Edmonton, Quebec, Iqaluit) ஆகிய நகரங்களில் பயண நிகழ்வுகளை திருத்தந்தை பிரான்சிஸ் நிறைவேற்றவுள்ளார்.

Comment