No icon

புனித பவுல் அடியாரின் உயிர்ப்புச் சிந்தனைகள்

முன்னுரை: புதிய ஏற்பாடு முழுவதும் நமதாண்டவர் இயேசுவைப் பற்றிப் பேசினாலும் அவரைப் பற்றி அவை பேசும் கண்ணோட்டத்திலும், தரும் அழுத்தங்களிலும் வித்தியாசங்கள் உள்ளன
என்பது தெளிவு. அதிலும் குறிப்பாக நற்செய்திகள் இயேசுவின் வல்ல செயல்கள் மற்றும் போதனை
களுக்கு முக்கியத்தும் தர, பவுலின் மடல்களில்
இவை அதிகம் பேசப்படாததது வியப்பளிக்கின்றது. அதற்கு மாறாக அவர் இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவற்றை முக்கியப்படுத்திப் பேசுகின்றார். இதற்குப் பல காரணங்கள் சொல்லப் படுகின்றன. அவற்றுள் முதன்மையானது நற்
செய்திகள் எழுதப்படுவதற்கு முன் எழுதப்பட்ட பவுலின் மடல்களிலும், தொடக்கத் திருஅவை யிலும் முதன்மையான அவசரத் தேவையாக இருந்தது. இயேசுவின் மரணத்தையும் அதற்கு
முந்தைய அவரது பாடுகளையும் விளக்குவது தான். மேலும் சிலுவைச் சாவை ஏற்ற அவரை
ஆண்டவரும் மெசியாவும் என எடுத்தியம்வுவது அவர்களின் போதனையின் கருவாக இருந்தது. இதை பவுலடியார் தனது மடல்களில் குறிப்பாக 
1 கொரி 15ல் நாம் பெறும் கிறிஸ்தியல் புரிதல்கள், அவை கிறிஸ்தவரின் நம்பிக்கையிலும் கிறிஸ்தவ வாழ்வியலிலும் ஏற்படுத்தும் தாக்கத்தை விவாதித்து, இறுதியாக, இயேசுவின் உயிர்த்தெழுதல் தரும் சவால்களைக் கோடிட்டுக் காட்டி முடிக்க விரும்புகின்றேன்.
1.  1 கொரி 15- சில புரிதல்கள்
 இயேசுவின் உயிர்ப்புப் பற்றி விவாதிக்க, விவரிக்க பவுலடியாருக்கு பின்னணியாக அமைந்தது சிலர் "இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை" (வச 12) என வாதிட்டதாகும். அதற்கு மாறாக, இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதே திருஅவையின் நம்பிக்கையின் உட்கரு. இதைப் பவுலடியார் புதிதாக உருவாக்கவும் இல்லை உண்டாக்கவும் இல்லை.
மாறாக, அவர் திருஅவையிடமிருந்து பெற்று,
முதன்மையானது எனக் கருதி தம் திருஅவைகளுக்கு, (இங்கு கொரிந்து திருஅவைக்கு), ஒப்படைத்திருந்
தார் (வச 3). அதாவது, "மறைநூலில் எழுதியுள்ள வாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார் (வச 3-4). இதில் இயேசுவின் வாழ்வின் இரு நிகழ்வுகளும், அவற்றைச் சரியாகப் புரிந்து கொள்ள இரு இறையியல் கண்ணோட்டங்களும் தரப்படுகின்றன.
இரு நிகழ்வுகள்: இயேசு கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்டதை முதல் நிகழ்வாகவும், அவர் உயிர்த் தெழுந்ததை இரண்டாம் நிகழ்வாகவும் தருகின்றார் பவுல். அவரைப் பொறுத்தமட்டில் இரண்டுமே வரலாற்று நிகழ்வுகள் காட்சிகளல்ல. இதை எண்பிக்க அவர் உயிர்த்த இயேசுவை கண்ட சாட்சிகளின் பட்டியலை இரு குழுவாக (கேபா, பன்னிருவர், ஐநூறுக்கும் மேற்பட்ட சகோதரர், சகோதரிகள் (முதல் குழு) யாக்கோபு திருத்தூதர் அனைவர், காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற தனக்கும் (இரண்டாம் குழு). பலர் இன்னும் உயிருடன் உள்ளனர் (காண் வச 6). இயேசுவின் உயிர்ப்பில் சந்தேகம் இருப்போர் அவர்களுடன் பேசி தெளிவு பெற்றுக் கொள்ளலாம்" எனக் கூறுவதுபோல பவுலடியார் இப்பட்டியலைத் தருகின்றார்.
இரு இறையியல் கண்ணோட்டம்: இயேசு
வின் இறப்பு, உயிர்ப்பு ஆகியவை வரலாற்று நிகழ்வுகளாக இருந்தாலும் அதைச் சரியாக விளங்கிக் கொள்ள இரு இறையியல் கண்ணோட்டங்களைத் தருகின்றார். முதலாவது இயேசு இறந்தது நம் பாவங்
களுக்காக (வச 3). எனவே இயேசுவின் பாடுகள், மரணத்தை எசா 53: 3-5ன் பின்னணியில் (மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார் (எசா 53:4), அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்
தார்; நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்
பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின் றோம்" (எசா 53:5). அதாவது இயேசு நம் பாவங்களுக்காக, நம் பதிலாளியாய், நாம்படவேண்டிய துன்பங்களைத் தன்மேல் சுமந்துகொண்டு துன்புற்று மரித்தார். அவரது பாவத்திற்காகவோ, தவறுக்காகவே இயேசு துன்புறவில்லை.
இரண்டாவது இவை மறைநூலில் எழுதப் பட்டுள்ளவாறு நிகழ்ந்துள்ளது. அதாவது திருநூலில் ஏற்கெனவே முன்னறிவிக்கப்பட்டவை இயேசுவில் நிறைவேறுகின்றன. யூத எண்ணப்படி 
திருநூல்தான் எதையும் நிரூபிக்கப் பயன்படுத்தப் படும் முதல் அத்தாட்சி. அதன்படி மெசியா பாடுபட வேண்டும்; அவர் உயிர்தெழுவும் வேண்டும் (வச 3,4). எனவே இது இறைவனின் திருவுளம், அவரால் தீர்மானிக்கப்பட்ட ஒன்று. அந்த காவங்கடந்த இறை நோக்கம் இயேசுவில் நிறைவேறுகின்றது.
2. கிறிஸ்தியல் புரிதல் 
"இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பபட்டார்" (வச 20) எனும் தொடக்கத் திருஅவையின் நம்பிக்
கையை மிக ஆணித்தரமாக வலியுறுத்தியபின் அது தொடர்பான ஒரு நீண்ட விளக்கத்தை இந்த அதிகாரம் முழுவதும் தருகின்றார். இதில் இருவகையான எண்ண ஓட்டங்கள் மிளிர்கின்றன. அதில் முதலாவது, இயேசுவைப் பற்றிய இன்னும் ஆழமான சில புரிதல்கள் ஆகும். இதை இயேசுவுக்கு பவுலடியார் தரும் சில அடைமொழிகளைக் கொண்டு
விளக்க முயல்கின்றேன்.
1. முதல்கனி (காண் வச 20 மற்றும் உரோ 8:23) யூத வழிபாட்டுப் பாரம்பரியத்தில் முதற்கனி அல்லது விளைச்சல் முக்கியத்துவம் வாய்ந்தது. அது பிற விளைச்சல்களை புனிதப்படுத்துவதுபோல, முதலில் உயிர்த்தெழுந்த கிறிஸ்து அவரைச் சார்ந்த மானுடர் அனைவருக்கும் உயிர்ப்பை வழங்க வல்லவரால் இருக்கின்றார்.
2. கடைசி ஆதாம், இரண்டாம் ஆதாம் (வச 45-49, 21-22); புரிதலில் முதல் ஆதாமின் பாவத்தால் சாவு வந்தது, அது மானுடம் அனைத்தையும் பாதித்தது. இரண்டாம் ,  கடைசி ஆதாம் (கிறிஸ்து) உயிர்த்ததால், அந்த உயிர்ப்பும் மானுடம் முழுவதையும் பாதிக்கின்றது. எனவே, "கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர்" (வச.22).
3.    கிறிஸ்து ஆண்டவர். இந்த அதிகாரம் முழுவதும்
பல இடங்களில் இயேசுவுக்கு இவ்விரு அடை
மொழிகளும், பொருத்திப் பேசப்படுகின்றன. ’உண்மையில் துன்பப்பட்டு, மரித்து, உயிர்த்த வரலாற்று இயேசு’ தான். ஆனால் ’கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து அடக்கம் செய்யப்பட்டார்’ (வச 3-4) என்பதன் வழியாகவும், பிற இடங்களில் இவ்விரு தலைப்புகளும் பயன்படுத்தப்
பட்டிருப்பதன் வழியாகவும் இயேசுவின் பாடுகள்
மரணம் உயிர்ப்பு ஆகியவற்றை வரலாற்று நிகழ்வாகப் பார்ப்பதைவிட கடவுளின் செயல்
பாடாக, இறையியல் அல்லது மீட்புச் செயல்பாடாக பவுலடியார் காண்கின்றார்.
அடுத்து இயேசுவின் இந்த பாஸ்கா நிகழ்வு கிறிஸ்தவ நம்பிக்கையிலும் வாழ்விலும் ஏற்படுத்தும் தாக்கங்களைக் காண்போம்.
i. அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர்.
இவ்வதிகாரம் முழுவதும், இயேசு உயிர்த்தார் என்பதை நிறுவுவதோடு, அதன் விளைவாக அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதையும் நிறுவுவதற்குப் பவுலடியார் மிகவும் முயல்கின்றார் (குறிப்பாக காண். வச 12-28).
ii. கடைசிப் பகைவனாகிய சாவு அழிக்கப்படும்.
இயேசுவின் பாஸ்காத் திருநிகழ்வின் வழியாக நிகழ்ந்த முக்கிய விளைவு கடைசிப் பகைவளாகிய சாவு அழிக்கப்படுகிறது; "சாவு முற்றிலும் ஒழிந்தது; வெற்றி கிடைத்தது. சாவே உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே?" (வச 54-55). இயேசுவின் உயிர்ப்பில் கிறிஸ்தவர் பங்குகொள்ளும் போது அவரும் இந்தச் சாவை அழித்து வாழ்வுக்குள் கடந்து வந்துவிடுகின்றார். "சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்து கொள்கின்றது" (காண். வச 53).
iii. இறையாட்சி நிறுவப்படுகின்றது.
இயேசுவின் உயிர்ப்பும், கிறிஸ்தவரின் எதிர்கால உயிர்ப்பும் இறையாட்சி நிறுவப்படுவதுடன் தொடர்பு படுத்தப்படுகின்றது: ’கிறிஸ்து ஆட்சியாளர், அதிகாரம் செலுத்துவோர், வலிமையடைவோர் ஆகிய அனைவரையும் அழித்துவிட்டு, தந்தையாகிய கடவுளிடம் ஆட்சியை ஒப்படைப்பார். எல்லாப் பகைவரையும் அடிபணிய வைக்கும்வரை அவர் ஆட்சி செய்தாக வேண்டும்" (வச 24-25). அதாவது, கிறிஸ்துவின் உயிர்ப்பிலே சாவின் மீதான முதல் வெற்றிபெறப்பட்டது. முழுவதுமான இறுதி வெற்றி அனைவரின் உயிர்த்தெழுதலின்போது நிகழும்... இந்த இடைப்பட்ட காலத்தில் இதை நிகழ்த்துவதற்கான எல்லா அதிகாரமும் கிறிஸ்துவுக்கு அளிக்கப்படுகின்றது. அவர் ஆட்சி செய்கின்றார் (வச 23-25). இறுதியாக அனைத்தையும் கடவுளுக்கு அடிபணியச் செய்தபின் "கடவுளே அனைத்திலும் அனைத்துமாயிருப்பார்" (வச 28). இவ்வாறு இறையாட்சி முழுவதுமாய் நிறுவப்படும்.
3. இயேசுவின் உயிர்த்தெழுதல் தரும் சவால்கள்
i.    கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நம் உயிர்த் தெழுதலுக்கு அத்தாட்சி.
ii.    நாம் உடலுடன் எழுப்பப்படுவோம், இவ்வுடல் அழியாமையையும் சாகாமையையும் அணிந்து கொள்ளும்.
iii.இயேசுவின் உயிர்ப்புக்கும், அவரின் நிறை வருகைக்கும் இடையே நிகழும் இறையாட்சியில் நாம் இருக்கின்றோம். அதன் நிறைவை நோக்கி நாம் போய்க்கொண்டிருக்கின்றோம். இந்த இறையரசின் நிறை வருகைக்கு உழைக்க வேண்டியது நமது கடனாகும்.

Comment