No icon

சிலுவை வழியே உயிர்ப்பு

2000 ஆண்டுகளுக்கு முன் நிலவிய அதே சூழல் இன்றும் நீடித்துக் கொண்டிருக்கிறது. இன்றைய நாளில், சுற்றுச்சூழல் போராளியான முகிலன், மக்களின் போராட்டங்களுக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்து வந்தவர். இவர் கடத்தப்பட்டு எங்கு இருக்கிறார் என்று எவருக்கும் தெரியவில்லை. அதேவேளையில், தன் மண்ணுக்காகவும் மக்களுக் காகவும் தூத்துக்குடித் துப்பாக்கிச் சூட்டில் உயிரை மாய்த்துக் கொண்டவர்களில் ஒருவர் ஸ்னோலின் என்கிற 17 வயது செவிலியர் மாணவியும் அடக்கம். இத்தகைய நம்பிக்கையற்றச் சூழலில், இயேசுவின் வாழ்வும், இறப்பும், உயிர்ப்பும் நமக்குப் புரிதலையும், புதுவழியையும் எடுத்தியம்புகிறது.
சிலுவை: மகிமையின் சின்னம்
மாபரன் இயேசுவை நினைக்கும் போது சிலுவைதான் நம் கண்முன்னே தெரிகிறது. ஒருசில வேளைகளில் சிலுவை என்பது மனித வாழ்வில் இடறலாக முரண்பாடாக பார்க்கப்படுகின்ற சின்ன
மாக விளங்குகிறது. “மரத்தில் தொங்கவிடப் பட்டோர் சபிக்கப்பட்டோர்" என்று எழுதியுள்ள வாறு நமக்காகக் கிறிஸ்து சாபத்துக்கு உள்ளாகி நம்மைச் சட்டத்தின் சாபத்தினின்று மீட்டுக் கொண்டார்  (காலா 3:13) என்று சிலுவையின் மேன்மையை திருத்தூதர் பவுல் விளக்குகிறார். கடவுளும், மனிதனும் சங்கமிக்கும் சின்னம் என்பது சிலுவையாகும். அவமானம், வெறுப்பு,
மடமை, இடறல் இவைகளின் ஒட்டு மொத்த
அடையாளமான சிலுவை மீட்பின் சிலுவையாக, மகிமையின் சின்னமாக, தியாகத்தின் வெளிப் பாடாக உருமாறியிருக்கிறது. சிலுவையிலிருந்து கிறிஸ்துவின் வாழ்வைத் திரும்பிப்பார்க்கிறோம். கிறிஸ்தவ அறநெறி, மனித இயல், வாழ்வியல்
அனைத்தும் சிலுவையிலிருந்து ஊற்றெடுக் கின்றன.
மனித துன்பங்களைப் பேசாமல், தீமையின்
அவலங்களை, துயரங்களைக் கூறாமல் சிலுவையின்
பொருளை அறிய முடியாது. இன்றைய சமூகச்
சூழலில், மனிதர்கள் சிதைக்கப்பட்டு, மாண்புகள் மறுக்கப்பட்டு, காறிஉமிழப்பட்டு, அவமானச் சின்னங்களாக, நடத்தப்படும்போது அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது பெருந்தவறாகும். இந்நிகழ்வு இயேசுவின் சிலுவையை உதறித் தள்ளுவது போலாகும். மீட்பும், வெளிப்பாடும், சிலுவையில் சந்திக்கின்றன. கடவுளுக்காகக் கீழ்ப்படிந்து நீதிக்காகத் துன்புறுகையில், நாமும் கிறிஸ்துவின் துன்பத்தில் பங்குபெறுகிறோம். 
இறையாட்சிக்கான தற்கையளிப்பு
இறையாட்சியைப் பரப்பவே மாபரன் இயேசு நம்மில் ஒருவரானார்.  மேலும் தந்தையாம் கடவுள் இவ்வுலகத்தை அன்பு செய்ததினால், கிறிஸ்து மனுவுருவெடுத்து இறையாட்சியை நிறுவினார். இறையாட்சியின் விழுமியங்களான நீதி, சுதந்திரம், அன்பு ஆகியவற்றை நிலை நாட்ட, இயேசு தம் போதனைகளினாலும், செயலினாலும் எடுத்துரைத்தார். இத்தகைய விழுமியங்கள் ஆதிக்கக்காரர்களை அச்சுறுத்தும் பண்புகளாகவும், அவர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்கும் உள்ளாக்குபவையாகவும் உள்ளன. யாரெல்லாம் இயேசுக்கு எதிராக இருந்தார்களோ, அவர்கள்
இயேசுவிற்குச் சாவையே அளித்தார்கள். ஆனால் தந்தையாம் கடவுள் இயேசுவை ஏற்று உயிர்ப்பித்தார். சிலுவை என்பது தண்டனை அல்ல; மாறாக இறையாட்சிக்கானப் பரிசாகும். போர்சித் என்ற ’இறையியலாளர்  கிறிஸ்து இறந்ததால் கடவுள் நம்மை அன்பு செய்யவில்லை. மாறாகக் கடவுள் நம்மை அன்பு செய்ததால்தான் கிறிஸ்து இறந் தார்’ என்கிறார்.
சிலுவை: கடவுளின் உடனிருப் பின் சின்னம்
கடவுள், தம் மகனை இவ்வுலகத்திற்கு அளிப்பதன் மூலம் ‘உண்மையான அன்பு இதுதான்’ இத்தகையதுதான் என்று
முன்மாதிரி காட்டியிருக்கின்றார். “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கை விட்டீர்?” என்கிற இயேசுவின் கதறலில், தந்தையாம் கடவுளின்
அமைதியானது வியப்பாக இருக்கிறது. ஆனால், இந்நிகழ்வில், தந்தையும் துன்புற்றார்.
தன்மகன் இயேசுவை மரணிக்கும் அளவிற்கு கையளிப்பதினால், கடவுளின் அன்பை நமக்கு வெளிப்படுத்துகிறார். எனவே இத்தகைய கடவுளின் அமைதியும், ஒருவித அன்பின் வெளிப்பாடாக, மறைபொருளாக இருக்கிறது
கடவுள் மனிதரின் துன்பத்தைக் கண்டு மனம் இளகாதிருப்பவரல்ல, மறைந் திருப்பவரும் அல்ல. மேலும் மனிதத் துன்பமும், துயரமும் கடவுளின் கரிசனைக்கு, பராமரிப்புக்கு அப்பாற்பட்டதல்ல. துன்பம், சிலுவை மீட்கும் கடவுளின் உடனிருப்பின் அடையாளமாகும். அவர் நேரடியாக மனித வாழ்க்கையில் நுழைகிறார். மனிதத் துன்பங்களில் இரண்டறக் கலக்கிறார். நமது துயர வாழ்வுப் பயணத்தில் துணைவரும் நண்பராகத் துன்புற்று, புதுவாழ்வைக் காண்பிக்கிறார்.
சிலுவை: விளிம்பை மையமாக்கிய பாதை
இயேசுவின் சிலுவைச் சாவிற்கு முழு
முதற்காரணியாக இருப்பது அவரின் செயல்
களும், வார்த்தைகளும் ஆகும். இயேசுவின் சிறப்புத் தேர்வானது, ஏழைகள், பாவிகள், குழந்தைகள், பெண்கள் இன்னும் குறிப் பாக சமுதாயத்தில் ஓரங்கட்டப்பட்ட மக்கள்
மீதுதான் இருந்தது. குறிப்பாக இம்மக்களை அதிகார வர்க்கத்திற்கு முன்பாக நடுவே நிறுத்தி, மக்கள் அனைவருக்கும் கற்பித்தார். அவரது புதுமைகள் அனைத்தும் சமூக மாற்றத்திற்கு புதுவழிகளாக இருந்தன. அடிமைச் சமுதாயத்தில், அடக்குமுறைகளில் ஆதிக்கச்
சமுதாயத்தில், நடுவராக, நீதியாளராக, உண்மை
யாக வாழ்ந்திருக்கிறார். “நெஞ்சுக்கு நீதி” என்ற மையப்
பொருளில், அன்பையும், அறத்தையும்
மையமாக்கி வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
சமூகத்தாலும், சட்டங்களினாலும், மதத்தினா
லும், அறியாமையினாலும், நோயினாலும் பாதிக்கப்பட்டவர்களை முன்னிறுத்தினார். இயேசுவின் முன்னுரிமை அதிகாரத்தில் இருப்பவர்களைப் பயமுறுத்தியது. பெரும்
பான்மை மக்களின், ஏழைகளின், உரிமைக்
காகக் குரல்கொடுப்பதுதான் சிலுவையின்
அடியில் நிற்பதாகும். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அழைப்பின்படி,  திருச்
சபையைப் பொருத்த மட்டில்,வறியோர்பால் விருப்பத்தேர்வு என்பது சமுதாயப் பகுப்பாய்வின் விளைவால் வந்ததல்ல. இறைவனின் அழைப்பு, இயேசுவின் சொல், செயல், வாழ்க்கைமுறை ஆகியவற்றிலிருந்து வந்தவையாகும்.
சிலுவை: அன்பின் அடையாளம்
இயேசு நமக்குக் காட்டிய அன்பானது, முன் மாதிரியைக் காட்டும் காலடி கழுவுதலினாலும், என்று முள்ள உடன்படிக்கையான நற்கருணையினாலும் மற்றும் பிறருக்காக உயிரை அளித்தல் என்னும் நிகழ்வு
களாலும் வெளிப்பட்டது. இயேசுவுக்கும்  சிலுவைக்கும் உள்ள உறவில் மானுடத்தில் புதிய அறநெறி தொடங்கி
யிருக்கிறது. புதிய வாழ்வு தானாக பிறப்பெடுப்பது இல்லை, மாறாக அன்பினாலும், தியாகத்தினாலும்தான் நிகழ்கிறது. சிலுவையினுள் மறைந்திருப்பது இயேசுவின்
வாழ்வும், போதனையுமாக இருக்கிறது. கடவுளின் ஆற்றலும், ஞானமும், அதே வேளையில் அவரது
வலிமையின்மையும் வெறுமையும் சிலுவையில் காண்கிறோம். தந்தையாம் கடவுள் இயேசுவோடு இணைந்து துன்பத்தில் பங்கெடுக்கெடுப்பது மறை பொருளாக இருக்கிறது.
சிலுவை: சமூகப் புரட்சி 
இயேசுவின் சிலுவை, உயிர்ப்பு ஒளியில் கடவுளை உணர்ந்து புரிந்து கொள்ளும்போது, நம்மை ஒரு நெருக்கடிக்கு, ஒரு புரட்சிக்கு இட்டுச் செல்கிறது. கார்ல் மார்க்ஸ் தேடலில், சமூக முரண்பாடு
களின் ஊடாக, அவற்றின் தீர்வைநோக்கிப் பொருள்
வகைச் சக்தியாக, தொழில்படக் கூடிய ஒரு வர்க்கம் தோன்ற வேண்டும். அது தன்னைமட்டும் விடுதலை செய்துகொள்ளகூடிய  வர்க்கமாக இருத்தல் போதாது. மொத்த சமூக முரணின் வெப்பத்தையும், தன்னில் சுமக்கும் வர்க்கமாக இருக்க வேண்டும். பூரண இழப்பு என்ற
ஒரு நிலையை எட்டி, பூரண மீள்வாக, அது எழுச்சி பெறுவதாக இருக்க வேண்டும். அது சீர்
குலைந்து உருமாற வேண்டும். நாட்டின் வளர்ச்சி
என்பது, ஏழைகளை மையப்படுத்திய வளர்ச்சி யாகும். தனியொருவன் தனித்து நிற்பதல்ல வளர்ச்சி, மாறாக ஒவ்வொருவரும் தனித்துவமாக வளர்வதுதான் உண்மையான வளர்ச்சியாகும். பெரும்பான்மை மக்களுக்கான சமூகம் என்பது விளிம்பில் உள்ளவர்களை அங்கீகரிப்பதும், கஷ்டப் படுவோர்களுடன் உடனிருப்பதும், ‘விடிவுகாலம் பிறக்காதா’ என்று ஏங்கித் தவிப்பவர்களுடன் மாற்றுச் சமூகச் சிந்தனைகளைச் செயலாக்கத்திற்கு வழிவகுப்பதுமாகும். “மக்களாட்சி தோற்றது என்றால், தாழ்த்தப்பட்ட மக்கள் அடியோடு அழிக்கப் படுவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை” என்கிறார் அம்பேத்கர்.
சிலுவை வழியே உயிர்ப்பு
யார் ஒருவர் மக்களுக்காகப் போராட முன் வருகிறாரோ ஒருங்கிணைந்த மனதும், நம்பிக்கையும், இழப்பை ஏற்க தயார்நிலையும், வேரோட்டமான திறந்த மனநிலையும் கொண்டிருக்
கிறாரோ அவர் மக்கள் மனதில் நித்தமும் குடிகொள்ள
லாம். உரிமைக்காக, மக்கள் நலனை முன்னிருத்தி
போராட்டக்களத்தில் குதிப்பது திருஅவையின்
கடமையாக இருக்கிறது. நீதிப்போராட்டத்தில் திருஅவை பார்வையாளராக இருக்கக்கூடாது. இறை வாக்கினரைப்போன்று இடித்துரைக்க வேண்டும். மானிடரை விவேகப்படுத்த வேண்டும். மக்களை நல்ல செயல்பாட்டிற்கு ஊக்கப்படுத்த வேண்டும். வேறுபாடுகளைக் களைந்து அனைவரை யும் ஒன்றித்து ஆக்கப்பூர்வமான செயல்களைச் செய்வது என்பது கிறிஸ்தவர்களின் கடமையாகும்.
இயேசு துன்பம் என்றால் என்ன என்பதை விளக்க வரவில்லை. ஆனால் அதைத் தனது உடனிருப்பால் நிரப்ப வந்தார். துன்பத்தை கூண்டோடு அழிக்க அல்ல, நமது துன்பத்தில் பங்கேற்க வந்தார். சிலுவையை நீக்க அல்ல அதில் அறைபட வந்தார். நாம் சிலுவையில் அறையப்படவிலையெனில், உயிர்ப்பைப் பெற இயலாது. எனவே, திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பினை ஏற்று, மாபரன் இயேசுவைப் போன்று, ஏழை மக்களைத் தயக்கமின்றித் தேடிச் செல்ல வேண்டும்.  நாம் பெற்ற இன்பத்தைத் தாராளமாக அவர்களோடு பகிர்ந்து கொள்வோம். சிலுவைகளைக் கண்டு அஞ்சாமல் உயிர்ப்பைக் கொண்டாடுவோம்.

Comment