No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

தீ விபத்தில் உயிரிழந்தோருக்குத் திருத்தந்தையின் இரங்கல் செய்தி

அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூயார்க் நகரின் பிராங்க்ஸ் பகுதியில் 19 அடுக்கு மாடிக் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், 9 குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்தது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டு, அனுதாபத் தந்தி ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பியுள்ளார். 19 அடுக்கு மாடிக் கட்டிடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் மாடிகளில் உருவான தீயின் புகை அனைத்து மாடிகளையும் நிறைத்ததைத் தொடர்ந்து, குறைந்தபட்சம் 19 பேர் உயிரிழந்தனர், 32 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டு திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், நியூயார்க் கர்தினால்  திமோத்தி டோலன் அவர்களுக்கு அனுப்பியுள்ள தந்திச் செய்தியில், இத்தீவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருடனும் திருத்தந்தை தன் நெருக்கத்தை வெளியிடுவதோடு, அம்மக்களை இறைவனின் இரக்கம்நிறை அன்பில் ஒப்படைப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஜனவரி 9 ஆம் தேதி, கடந்த ஞாயிறன்று, இடம்பெற்ற இந்தத் தீவிபத்தில் பலியானவர்கள் பலரும், புகையால் மூச்சுத்திணறி இறந்தார்கள் எனத்  தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

Comment