No icon

பொதுக்காலம் 16 ஆம் ஞாயிறு

ஆனால் தேவையானது ஒன்றே! தொநூ 18:1-10, கொலோ 1: 24-28, லூக் 10:38-42

ஏறக்குறைய பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன், என் குருத்துவப் பயிற்சியின் ஆன்மீக ஆண்டில், தியானம் கற்பிக்க வந்த அருள்பணியாளரிடம், ‘கண்களை மூடிக்கொண்டே அமர்ந்திருப்பதால் என்ன பயன்? இப்படிச் செய்வதால் என்ன மாற்றம் நடக்கும்? உலகில் அநீதி மறையுமா? புதிய கண்டுபிடிப்புகள் நடக்குமா? நாம் பல இடங்களைச் சுற்றிப் பார்க்க முடியுமா? பலருக்குப் பணி செய்ய முடியுமா? புதியவற்றைக் கற்க முடியுமா? சும்மா யார் வேண்டுமானாலும் கண்களை மூடிக்கொண்டு, உட்கார முடியும். இல்லையா?’ என்று நான் விவாதித்தது என் நினைவில் இருக்கிறது. பத்தொன்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. அருள்பணி வாழ்வில் பதிமூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. நான் விழித்திருந்தது, பரபரப்பாக வேலை செய்தது, புதிதாகக் கற்றது போன்றவற்றால் உலகில் எந்த மாற்றமும் நடக்கவில்லை என்பதை இன்று நான் கற்றுக்கொண்டேன். உலகம் தன் போக்கில் இயங்குகிறது. என் வேகத்தால் என்னில் மாற்றம் ஏற்பட்டதைவிட, என் உடல்நலம் பாதிக்கப்பட்டது என்றே நான் உணர்கிறேன்.

நிறைய வேகம். நிறைய செயல்பாடுகள். எந்நேரமும்  எதையோ செய்துகொண்டிருக்க வேண்டும் என்று, உலகம் சொல்கிறது. நேர மேலாண்மை, உறவு மேலாண்மை, இட மேலாண்மை என்று தன்னுதவி புத்தகங்கள் குவிகின்றன. யூடியூபில் காணொளிகள் நிறைகின்றன. ‘உங்கள் நேரத்தை சேமிப்பது எப்படி?’ ‘உங்கள் பணத்தைச் சேமிப்பது எப்படி?’ ‘நிறைய நண்பர்களைச் சம்பாதிப்பது எப்படி?’ ‘குறைவான நேரத்தில் மிகுதியான செயல்களைச் செய்வது எப்படி?’ என்று, நிறைய ‘எப்படி’ இருக்கின்றது. நான் வேகமாகச் செல்ல விரும்பவில்லையென்றாலும், நான் எடுத்திருக்கின்ற பொறுப்புகள் என்னை வேகமாக இயக்கிக்கொண்டே இருக்கின்றன. கொஞ்ச நேரம் கோவிலில் அமர்ந்தாலும், என் வேலைகளில்தான் என் எண்ணம் இலயிக்கின்றது. என் வேலைகளுக்காக நான் தியாகம் செய்யும் நேரம் என் செப நேரமாகவே இருக்கின்றது.

ஏன் இந்த வேகம்? ஏன் இவ்வளவு செயல்பாடுகள்? எனக்கு ஏன் நிறைய பேரைத் தெரிய வேண்டும்? நான் ஏன் எல்லாரிடமும் நட்போடு இருக்க வேண்டும்? நான் ஏன் எல்லாக் குறுஞ்செய்திகளுக்கும் பதில் அனுப்ப வேண்டும்? நான் ஏன் எல்லா ஃபோட்டோக்களையும் விரும்ப வேண்டும்? நான் ஏன் ஸ்மார்ட்ஃபோன் வைத்துக்கொள்ள வேண்டும்? நான் ஏன் ஆன்லைன் பேங்கிங் செய்ய வேண்டும்?

ஒன்றுமே செய்யாமல் ஓய்ந்திருத்தல் தகாதா?

இலக்குகளே இல்லாமல் வாழ்வது கூடாதா?

வாழ்வே இலக்கு என்று இருக்கும் போது வாழ்வதற்கு ஏன் இலக்குகள்?

என்னுடைய இன்றைய பொழுதையே நான் முழுமையாக வாழாதபோது, எதற்காக நாளைக்கான சேமிப்புகள்? என் நண்பர்கள் நாளை என்னோடு இருப்பார்கள் என்பதற்காக நான் அவர்களோடு இன்று பழகுகிறேனா? ஏன் எல்லாவற்றையும் நான் நாளைக்காகச் செய்ய வேண்டும்?

ஒரு பக்கம் செய்ய வேண்டிய வேலை. இன்னொரு பக்கம் எடுக்க வேண்டிய ஓய்வு. இப்படிப்பட்ட குழப்பமான தருணத்தில், ஆண்டவரின் வார்த்தை இன்று நமக்கு ஆறுதலாக வருகிறது: ‘ஆனால் தேவையானது ஒன்றே’ என்கிறார் ஆண்டவர்.

“தேவதாரு மரங்களருகே ஆண்டவர் ஆபிரகாமுக்குத் தோன்றினார்” என்று தொடங்குகிறது இன்றைய முதல் வாசகம் (காண். தொநூ 18:1-10). ‘டைட்டன் ஷோரூம்,’ ‘கீர்த்தி டென்டல் கிளினிக்,’ ‘வோடஃபோன் ஷோரூம்,’ ‘சித்தி விநாயகர் கோவில்’ என்று லேன்ட்மார்க்குகள் தோன்றாத அந்த நாள்களில் மரங்களை வைத்தேதான் இடங்கள் அடையாளம் சொல்லப்பட்டன. ஆண்டவர் ஆபிரகாமுக்குத் தோன்றிய இடம் அப்படிப்பட்ட ஒரு லேன்ட்மார்க் தான். தன் கூடாரத்தின் வாயிலில் அமர்ந்திருக்கும் ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்க “மூன்று மனிதர்கள் நிற்கின்றார்கள்.” இந்த ‘மூன்று மனிதர்கள்’ தாம் ‘மூவொரு இறைவனின்’ முதல் அடையாளம் என்கிறது நம் கத்தோலிக்க இறையியல். ‘ஆபிரகாமின் காத்திருத்தல்’ பற்றி வாசிக்கின்ற வாசகருக்கு இரண்டு விடயங்கள் புரிகின்றன: (அ) ஆபிரகாம் வாழ்வில் ஏதோ முக்கியமான நிகழ்வு ஒன்று நடக்கப் போகிறது. (ஆ) ஆபிரகாமின் காத்திருத்தல் அவரின் விருந்தோம்பல் பண்புக்குச் சான்றாக அமைகிறது.

முதலில் ஆபிரகாமின் காத்திருத்தலைப் புரிந்து கொள்வோம். தொடக்க கால சமூகத்தில், குறிப்பாக பாலைநிலங்கள் மிகுந்திருந்த மத்திய கிழக்கு பகுதியில் ‘விருந்தோம்பல்’ முதன்மையான மதிப்பீடாகக் கருதப்பட்டது. ‘நீ இன்று ஒருவருக்குக் கொடுக்கும் தண்ணீரை நாளை உனக்கு வேறொருவர் கொடுப்பார்’ என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. ஆகையால், வழிப்போக்கர்கள் யார் வந்தாலும், அவர்களுக்கு விருந்தோம்பல் செய்வது மத்திய கிழக்கு நாட்டு மரபு. விருந்தோம்பல் மிக மேன்மையான மதிப்பீடாகக் கருதப்பட்டதால்தான், லோத்து தன் இல்லத்தில் வந்திருக்கும் விருந்தினர்களைக் காப்பாற்றுவதற்காக தன் இரு மகள்களை பாலியல் பிறழ்வுக்கு உட்படுத்தத் தயாராக இருக்கின்றார் (காண். தொநூ 19). ஆக, ஆபிரகாமின் காத்திருத்தலும், அந்நியர்களைக் கண்டவுடன் அவர்களை ஓடிச் சென்று வரவேற்றலும், உணவு தந்து உபசரிப்பதும் அவரின் விருந்தோம்பலைக் காட்டுகின்றது. தன் வேலையை அவர் சாராவுடன் பகிர்ந்து செய்கின்றார். இவ்வாறாக, விருந்தோம்பலில் பெண்களும் சம உரிமை பெறுகின்றனர்.

இரண்டாவதாக, ஆபிரகாமின் வாழ்வில் நடக்கப் போகும் முக்கியமான நிகழ்வு. ஆபிரகாமின் விருந்தோம்பலில் நிறைவு பெற்ற மூன்று மனிதர்கள் ஆபிரகாமிடம்: “நான் இளவேனிற் காலத்தில் உறுதியாக மீண்டும் உன்னிடம் வருவேன். அப்பொழுது உன் மனைவி சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்” (18:10) என, அவருக்கு ஒரு மகனை வாக்களிக்கின்றனர். இந்த வாக்குறுதியைக் சாராவும் கேட்கின்றார். கேட்ட சாரா டக்கென சிரித்து விடுகின்றார். அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட மகன் ‘ஈசாக்கின்’ பெயரின் பொருளும் அதுவே - ‘அவன் என் சிரிப்பு’ அல்லது ‘அவன் என் மகிழ்ச்சி.’ இவர்களின் இந்த வாக்குறுதி ஆபிரகாம் வாழ்வில் மிக முக்கியமானது. ஏனெனில், ஆபிரகாம்-சாரா தம்பதியினரின் முதிர்வயதைக் கணக்கில் கொண்டு, இந்த வாக்குறுதி நிறைவேறுமா, இல்லையா என்ற சந்தேகம் வாசகர்களின் மனதில் எழுகின்றது. மேலும், தொநூ 12 இல் “உன் இனத்தைப் பலுகிப் பெருகச் செய்வேன்” என்று, ஆண்டவர் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதி நிறைவேறப்போகிறது என்ற நம்பிக்கை எழுகின்றது.

தன்னுடைய முதிர்வயதில், தன்னுடைய விருந்தோம்பலில் கருத்தாயிருந்து, தன்னுடைய குழந்தையின்மைப் பற்றி வருந்திக்கொண்டிருந்த ஆபிரகாம் அந்த மூவரின் பாதங்களில் அமர்ந்ததால் சிரிக்கும் செய்தியைப் பெறுகின்றார். ‘தேவையான ஒன்றை’ பெற்றுக்கொள்கின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். கொலோ 1:24-28), கிறிஸ்துவின் துன்பம் மற்றும் மாட்சி பற்றிய இறையியலை கொலோசை நகரத் திரு அவைக்கு எழுதும் பவுல், தான் இந்த நேரத்தில் பட்டுக் கொண்டிருக்கும் துன்பமும், திரு அவையினர் பட்டுக்கொண்டிருக்கும் துன்பமும் கிறிஸ்துவில் அவர்கள் இணைந்திருப்பதற்கான அடையாளம் என்பதைச் சுட்டிக்காட்டி, துன்பத்தைப்போல மாட்சியும் பின்தொடரும் என வாக்குறுதி தருகின்றார். வெளியே தங்களுடைய ஆறுதலைத் தேடிக்கொண்டிருந்த கொலோசை நகர மக்களிடம், ‘உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்து’ என்று பவுல் அவர்களைத் தங்களுக்கு உள்ளே கடந்து செல்லத் தூண்டுகின்றார். வெளியில் இருப்பவை தேவையற்றவை என உணர்கின்ற பவுல், உள்ளிருக்கும் அந்தத் தேவையானதை நோக்கி அவர்களை அனுப்புகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (லூக் 10:38-42), கடந்த வாரம் நாம் வாசித்த ‘திருச்சட்ட அறிஞரின் கேள்வி மற்றும் நல்ல சமாரியன் எடுத்துக்காட்டின்’ (லூக் 10:25-37) தொடர்ச்சியாக இருக்கிறது. “உன்னை அன்பு செய்வது போல உனக்கு அடுத்திருப்பவரையும் அன்பு செய்வாயாக!” என்ற பிறரன்புக் கட்டளையின் விளக்கமாக ‘நல்ல சமாரியன் எடுத்துக்காட்டு’ இருக்கிறது என்றால், “உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் ஆண்டவரை அன்பு செய்வாயாக" என்ற இறையன்புக் கட்டளையின் விளக்கமாக இருக்கிறது ‘மார்த்தா-மரியா எடுத்துக்காட்டு.’ ‘ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார்’ (10:30) என்று ‘நல்ல சமாரியன் எடுத்துக்காட்டு’ தொடங்குவதுபோல, ‘பெண் ஒருவர் இயேசுவை தன் இல்லத்தில் வரவேற்றார்’ (10:38) என்று தொடங்குகிறது. பெண்ணின் வரவேற்பை ஏற்று அவரின் இல்லத்திற்குள் நுழைந்த இயேசுவின் செயல், இயேசு தனது சீடர்களுக்குக் கொடுத்த மறைத்தூது அறிவுரையை அவரே வாழ்ந்து காட்டுவதாக இருக்கின்றது: ‘உங்களை வரவேற்பவர்களின் வீட்டுக்குச் செல்லுங்கள். உங்கள் முன் வைப்பவற்றை உண்டு, நலமற்றவர்களுக்கு நலம் தந்து, இறையரசு வந்துவிட்டது என அறிவியுங்கள்!’ (லூக் 10:8). நற்சீடரின் பண்பு ‘பார்ப்பது’ என்று ‘நல்ல சமாரியனும்,’ நற்சீடரின் இன்னொரு பண்பு ‘பாதத்தில் அமர்ந்து கேட்பது’ என்று ‘மரியாவும்’ சீடத்துவ பாடம் கற்றுத்தருகின்றனர். ஆணாதிக்கமும், தூய்மை-தீட்டு வித்தியாசம் காணுதலும் மேலோங்கி நின்ற யூத மரபுக்குமுன், ஒரு பெண்ணையும், ஒரு சமாரியனையும் சீடத்துவத்தின் முன்மாதிரிகள் என்று நிறுத்துவது இயேசுவின் மரபுமீறலுக்குச் சான்று.

மார்த்தா இயேசுவை தன் இல்லத்திற்கு வரவேற்று, விருந்தோம்பல் செய்கின்றார். மார்த்தாவைப் பற்றி தொடர்ந்து எதையும் பதிவு செய்யாமல், அவரின் சகோதரி மரியாவை வாசகருக்கு அறிமுகம் செய்கின்றார் லூக்கா. இயேசுவின் பாதங்கள் அருகே அமர்ந்து அவரின் வார்த்தைக்குச் செவிமடுப்பவராக அறிமுகம் செய்யப்படுகின்றார் மரியா. ‘பாதத்தில் அமர்வதும்,’ ‘வார்த்தைகளைக் கேட்டலும்’ சீடத்துவத்தின் இரண்டு முக்கிய பண்புகளாகக் கருதப்பட்டன (காண். திப 22:3, லூக் 5:1, 8:11, 21).

யூதர்கள் நடுவில் துலங்கிய ரபிக்களின் பின்புலத்தில் இந்த நிகழ்வைப் பார்ப்போம். யூதர்களின் மிஷ்னா, ‘உங்கள் இல்லம் ஞானியரின் சந்திப்பு இல்லமாக இருப்பதாக. ஞானியர் உங்கள் இல்லத்திற்கு வந்தால் அவர்களின் காலடிகளில் அமர்ந்து அவர்களின் வார்த்தைகளால் உங்கள் தாகம் தீர்த்துக்கொள்ளுங்கள். பெண்கள் அதிகம் பேசவேண்டாம்’ என்று கூறுகின்றது. ரபிக்கள் இல்லங்களுக்குள் நுழைவதுபோல, இயேசுவும் நுழைகின்றார். ஆனால், மரியா இயேசுவின் காலடிகளில் அமர்வது ஒரு மரபு மீறல். ஏனெனில், ரபிக்களின் வருகையின்போது அவர் அருகில் அமர்ந்து போதனையைக் கேட்க தகுதி பெற்றவர்கள், விருத்தசேதனம் செய்யப்பட்ட யூத ஆண்கள் மட்டுமே. யூத சிந்தனையின்படி, இங்கே சரியாகச் செயல்பட்டவர் மார்த்தா தான். ரபியின் வருகையின் போது, அவரை உபசரிப்பதில் காட்ட வேண்டிய அக்கறையையும், பரபரப்பையும் சரியாகக் கொண்டிருக்கின்றார் மார்த்தா. ஆனால், இயேசு மரியாவின் செயலை மேன்மையானதாகக் காட்டி, மார்த்தாவின் பரபரப்பையும், கவலைகளையும் சுட்டிக்காட்டி, மீண்டும் ஒரு புரட்டிப்போடுதலைச் செய்கின்றார்.

முட்செடிகளின் நடுவே விழுந்த விதைக்கு உதாரணமாக இருக்கின்றார் மார்த்தா. ஏனெனில், கனி கொடுக்கவிடாமல் அவரின் ‘கவலையும், வாழ்வின் கவர்ச்சிகளும்’ தடுக்கின்றன (காண். லூக் 8:14). தன் சமூகம் தனக்குக் கொடுத்த வேலையை சிரமேற்கொண்டு செய்பவராக மார்த்தா இருந்தாலும், “மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை” (காண். லூக் 4:4) என்று உணர்ந்த அவரின் சகோதரி மரியா, “எல்லாவற்றையும் துறந்தவராய் இயேசுவை மட்டும் பின்பற்றத் துணிகின்றார்” (காண். லூக் 5:11, 28). திருத்தூதர் பணிகள் நூலிலும், ‘எந்தப் பணி முக்கியமானது? உணவு பரிமாறுவதா? அல்லது இறைவார்த்தையை அறிவிப்பதா?’ என்ற கேள்வி எழும்போது, ‘இறைவார்த்தை அறிவிப்பை’ தேர்ந்து கொள்ளும் திருத்தூதர்கள், ‘உணவு பரிமாறுவதற்காக’ திருத்தொண்டர்களை ஏற்படுத்துகின்றனர் (காண். லூக் 6:1-6).

‘மார்த்தா, மார்த்தா’ என இருமுறை அழைத்து அவரைக் கடிந்து கொள்ளும் இயேசு, ‘இறையன்பும், இறைவார்த்தைக்குச் செவிமடுத்தலும்’ எல்லாவற்றையும்விட மேன்மையானது என்று உணர்த்துகின்றார். (‘செவிக்கு உணவில்லாதபோது வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும்’- குறள் 412 என்று, வள்ளுவப் பெருந்தகை சொல்வதும் இதற்கு ஒத்து இருக்கின்றது). மரியா ‘தேர்ந்துகொள்ளப்பட்டவரையே’ (லூக் 9:35) தேர்ந்துகொள்கின்றார். அதுவே அவர் தேர்ந்துகொள்ளும் நல்ல பங்கு. அது அவரிடமிருந்து எடுக்கப்படாது.

இன்று நான் ‘தேவையானது அந்த ஒன்றை தேர்ந்துகொள்வது’ எப்படி?

1. தேவையானது எது என்பதை முதலில் நான் அறிய வேண்டும்

‘இறைவன் ஒருவரே தேவையானவர். மற்றவர் அல்லது மற்றவை தேவையற்றவர்கள் அல்லது தேவையற்றவை’ என்று எளிதாகச் சொல்லிவிட முடியுமா? தேவையான அந்த இறைவன் இன்று மற்றவர்கள் வழியாகத் தானே வருகின்றார். மருத்துவமனையில் நோயுற்றிருக்கும் நம் நண்பர் அல்லது உறவினர் அருகில் இருப்பது தேவையற்றதா? சாலையில் அடிபட்டுக்கிடக்கும் ஒருவருக்கு உதவிக்கரம் நீட்டுவது தேவையற்றதா? அழுதுகொண்டிருக்கும் என் நண்பரின் அழுகையைத் துடைப்பது தேவையற்றதா? ஆலயத்தில் அமர்ந்துகொண்டிருப்பது மட்டுமே தேவையானதா? சில நேரங்களில் நம்முடைய பொறுப்பைப் தட்டிக்கழித்துவிட்டு ஆலயத்தில் அமர்வதே பாவமாகிவிடும். என்னைப் பொருத்தவரையில் ‘என் மூளை சொல்வதை நான் கேட்கும்போதெல்லாம் தேவையற்றதை நான் நாடுகிறேன். என் மனம் சொல்வதை நான் கேட்கும்போதெல்லாம் தேவையானது ஒன்றை நான் நாடுகிறேன்.’ ‘அவனைப் பார். நிறையப் படிக்கிறான். நீயும் படி!’- இது மூளையின் சொல். ‘அவளைப் பார். உன்னைவிட அழகாக இருக்கிறாள். அதை வாங்கு!’ ‘அவன் உன்னைவிடப் பணக்காரன். நீ பணம் சம்பாதி!’ ‘அவன் வெற்றியாளன். நீயும் கடினமாக உழை!’ இப்படி மூளை சொல்வது எல்லாமே நம்மைப் பரபரப்பாக்கிவிடும். ஒருவர் மற்றவரோடு நம்மை ஒப்பீடு செய்யத் தூண்டும். ஒருவர் மற்றவரைப் பற்றி புகார் அளிக்கத் தூண்டும். ஆனால், மனம் சொல்வதைக் கேட்பவர் மௌனமாகிறார். அல்லது மௌனமாக இருக்கும் ஒருவரே மனம் சொல்வதைக் கேட்க முடியும். ஆக, என் மூளையின் ஓசைகளைக் குறைத்து மனதின் மௌனம் நோக்கி நான் செல்ல வேண்டும்.

2. அமர வேண்டும்

அமர்தல் என்பது கீழை மரபில் செவிமடுத்தலின், பணிவிடையின், ஏற்றுக்கொள்தலின் அடையாளம். மார்த்தா நின்று கொண்டிருப்பதால் அமர்ந்திருக்கும் இயேசுவுக்கு மேல் இருக்கிறாள். மரியா அமர்ந்திருப்பதால் இயேசுவுக்கு கீழ் இருக்கிறாள். நின்றுகொண்டிருப்பது நல்லதுதான். ஆனால், அது மேட்டிமை உணர்வையும், பரபரப்பையும் உண்டாக்கிவிடும். ‘தலைவன் நானே இங்கு அமர்ந்திருக்கிறேன். ஊழியக்காரி நீ ஏன் நின்றுகொண்டிருக்கிறாய்?’ என்று, மார்த்தாவை மனதிற்குள் கேட்டிருப்பார் இயேசு. ஆக, வாழ்வில் எதற்கும் நாம் தலைவர்கள் அல்லர்; தலைவர் இறைவனே அமர்ந்திருக்கிறார். ஊழியன் நான் ஏன் பரபரப்பாக நின்றுகொண்டிருக்க வேண்டும்?

3. கேட்க வேண்டும்

அடுத்தவர் சொல்வதை நான் கேட்க வேண்டும் என்றால், இறைவனின் வார்த்தையை நான் கேட்க வேண்டும் என்றால், என் மனம் அமைதியாக வேண்டும். ஒரே நேரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் எட்டு ப்ரொஜெக்டர்களையும் ஒவ்வொன்றாக நான் அணைக்க வேண்டும். அப்போதுதான் குரல் கேட்கும், படம் தெரியும். இன்று நான் நிறையப் பாடல்கள் கேட்கிறேன், காணொளிகள் காண்கிறேன், உரையாடல்கள் செய்கிறேன். ஆனால், எல்லாம் முடிந்தவுடன் வெறுமையே மிஞ்சுகிறது. அப்படியென்றால் என் மனம் இன்னும் எதையோ கேட்க விரும்புகிறது. அதுதான் அவரின் குரல்.

இறுதியாக,

இன்று நான் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் அனைத்தையும் பட்டியலிடுகிறேன். ‘ஏன் பரபரப்பாகிப் பதறுகிறாய்?’ என்று, அவரின் குரல் என்னில் கேட்கிறது. ஒன்றும் செய்யாமல் அவரின் பாதங்களில் அமர்வதே அவர் எனக்கு விடுக்கும் அழைப்பாக இருக்கிறது.

நான் கொஞ்ச நேரம் அமர்ந்து பார்க்கிறேன். என் மௌனம் என்னைக் கொல்கிறது. எனவே, மெதுவாக என் இயர்ஃபோனை எடுத்து நான் காதுகளில் மாட்டுகிறேன். யாரோ எதையோ சத்தமாகப் பாடிக்கொண்டிருக்கிறார்.

‘ஆனால், தேவையானது ஒன்றே!’

Comment