No icon

மறைக்கல்வியுரை

ஒரு நல்ல சீடர் எப்போதும் விழிப்புடன் இருப்பார்

அன்பு நெஞ்சங்களே, டிசம்பர் 14 ஆம் தேதி, புதன் காலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெளிந்துதேர்தல் குறித்த தனது 12வது மறைக்கல்விப் பகுதியை 6 ஆம் பவுல் அரங்கத்தில் முதலில் இத்தாலியத்தில் தொடங்கினார். அதற்குமுன்பு, மத்தேயு நற்செய்தி இயல் 12: 43 முதல் 45 வரையுள்ள இறைவசனங்களும் வாசிக்கப்பட்டன.

புதன் மறைக்கல்வியுரை

அன்புச் சகோதரர், சகோதரிகளே காலை வணக்கம். தெளிந்துதேர்தல் குறித்த நம் மறைக்கல்வியில், இன்று இறுதிப் பகுதிக்குள் நுழைகிறோம். புனித இலெயோலா இஞ்ஞாசியாரின் முன்மாதிரிகையிலிருந்து தொடங்கி, இறைவேண்டல், தன்னறிவு, ஆன்மிக வறட்சி, ஆன்மிக ஆறுதல், நாம் எடுக்கும் தீர்மானங்கள் சரியானவையே என்பதை உறுதிசெய்யும் அடையாளங்கள் என தெளிந்துதேர்தலின் பல்வேறு கூறுகள் பற்றிச் சிந்தித்தோம். எனினும் தெளிந்துதேர்வு செய்கின்ற படிமுறை முழுவதையும் வழிநடத்தவேண்டிய ஓர் அடிப்படையான மனநிலை விழிப்புடன் கவனமுடன் (vigilance) இருத்தலாகும். இயேசு பல நேரங்களில் தம் சீடர்கள் விழிப்புடன் இருக்கவேண்டியதன் அவசியம் குறித்து எச்சரிக்கை விடுக்கிறார். அவ்வாறு இல்லையென்றால் பகைவன் நம்  கவனச்சிதைவை தனக்குச் சாதகமாக எடுத்துக்கொள்வான் மற்றும் நமது நல்ல முயற்சிகளை பூஜ்யமாக்கிவிடுவான்.

இதற்கு நம் ஆண்டவர் ஒரு தீய ஆவியின் செயல்பாட்டை நமக்கு எடுத்துக்காட்டாகக் கூறுகிறார். அந்தத் தீய ஆவி, ஒரு வீட்டை விட்டு விரட்டப்பட்டு பின்னர், அந்த வீடு அழகுபடுத்தப்பட்டு ஆனால் காலியாக இருப்பதையும், அந்த வீட்டின் உரிமையாளர் அங்கு இல்லாமல் இருப்பதையும் பார்த்து, தனது ஏழு தோழர்களோடு மீண்டும் அவ்வீட்டுக்குள் வருகிறது என்று இயேசு கூறுகிறார். அந்த வீட்டு உரிமையாளர் போன்று நாமும் நம் வீட்டைப் பாதுகாக்கத் தவறலாம். மற்றும் ஆண்டவர் குடியிருக்கும் இடமாக நம் இதயங்களைத் தூய்மையாகவும் வைத்துக்கொள்ளலாம். ஆண்டவரின் அருளில் நம்பிக்கை வைக்காமல், நம்மில் மிக அதிகமாக நம்பிக்கை வைக்கும்போது, நமது நடத்தையானது தீய ஆவிக்குக் கதவைத் திறந்துவிடும் மற்றும் அது முன்னைய நிலைமையைவிட கேடுள்ள நிலைமையில் நம்மைக் காணவைக்கும் (காண்க.லூக்.12:45). ஒரு நல்ல சீடர், எப்போதும் விழிப்புடன் இருப்பார், அவர் தூக்கமயக்கத்தில் இருக்கமாட்டார், தனது கடமையைச் செய்வதற்கு எப்போதும் தயாராகவும், விழிப்புடனும் இருப்பார். தெளிந்துதேர்வு செய்யும் நம் நடைமுறையில் நாம் எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும். ஏனெனில் விழிப்புடன் இருத்தல், ஞானத்தின் அடையாளம். அது எல்லாவற்றுக்கும் மேலாக, தாழ்ச்சியின் அடையாளம். அதுவே கிறிஸ்தவ வாழ்வின் உயர்ந்த பாதையாகும்.

இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்வில் நாம் எப்போதும் விழிப்புடன் இருத்தலின் அவசியத்தை வலியுறுத்திக்கூறி, கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக என்றுரைத்து தன் அப்போஸ்தலிக்க ஆசிரை அளித்தார்.

Comment